உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயில்களில் ஆடிப்பூரம்

குன்றத்து கோயில்களில் ஆடிப்பூரம்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆடிப்பூர விழா நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் முன் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி அம்பாள் முன்பு 3 முறை ஏற்றி இறக்கப்பட்டு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

கிரிவலப்பாதை பத்ரகாளியம்மன் கோயில் மூலவருக்கு வளையல் அணிவித்து பூஜை முடிந்து 5 வகை சாதம் படைக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்து வளையல் அணிவித்து லலிதா சகஸ்ர நாமம் பாடப்பட்டது. சன்னதியில் ஒரு லட்சம் வளையல்கள் அலங்காரமானது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் மூலவர் விசாலாட்சி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, கலவை சாதம் படைத்து லலிதா சகஸ்ர நாமம், கும்மி பாட்டு பாடப்பட்டது.பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது.

சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏலவார்குழலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை திருவிளக்கு பூஜையை தொடர்ந்து,அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடிவீதியில் எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !