பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :2885 days ago
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று (செப்.,13)காலை தீர்த்தவாரி நடைபெற்றது. இக்கோயிலில் சதுர்த்தி விழா செப்.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு நேற்று காலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து வடம் பிடித்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் இரவு வரை தரிசித்தனர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இன்று (செப்.,13) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் திருக்குளத்தில் காலை 10:00 மணிக்கு உற்ஸவ விநாயகர் எழுந்தருளலும், அங்குசத்தேவருக்கு அபிேஷக, ஆராதனைகளுடன் தீர்த்தவாரியும் நடைபெற்றது.