காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
ADDED :2572 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட நீதிபதிகள் நேற்று ஆய்வு செய்தனர். நேற்று மாலை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த, மாவட்ட நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி வசந்த லீலா, மாவட்ட நீதிமன்றம் எண் இரண்டின் நீதிபதி, கருணாநிதி, ஆய்வு செய்தனர். உடன், உதவி ஆணையர் ரமணி, கோவில் ஸ்ரீகாரியம், செயல் அலுவலர் தியாகராஜன் இருந்தனர்.
இது குறித்து, மாவட்ட நீதிபதி வசந்த லீலா கூறியதாவது: எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அறநிலையத் துறை கோவில்களில் ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என, ஆய்வு செய்து, அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவோம். பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.