கரும்பு வில் காமாட்சி
ADDED :5118 days ago
ஒருமுறை சிவன் தவத்தில் ஆழ்ந்திருந்தார். ஒரு முக்கியத் தேவைக்காக, அவரது தவத்தைக் கலைக்க தேவர்கள் முடிவெடுத்து மன்மதனை அனுப்பினர். அவன் தன் வில்லை வளைத்து அவர் மீது மலர்க்கணை தொடுத்தான். கோபமடைந்த சிவன், நெற்றிக்கண்ணால் அவனை சாம்பலாக்கினார். இந்த வெற்றியின் அடையாளமாக, மன்மதனின் கரும்புவில் சிவனிடம் வந்தது. உலகாளும் நாயகி பார்வதி அங்கு வந்தாள். தேவியின் கண்ணழகைக் கண்ட சிவன் தோற்றுப்போனார். அதனால், அவர் கையில் இருந்த கரும்புவில் பார்வதியிடம் வந்தது. அவளே காமாட்சி என்ற திருநாமம் பெற்றாள். காஞ்சிபுரத்தில் காமாட்சி பஞ்ச பிரம்ம பீடத்தில் பத்மாசனக் கோலத்தில் அருளாட்சி புரிகிறாள். கைகளில் அங்குசம், பாசம், மலர்அம்பு, கரும்பு வில் ஏந்தியிருக்கிறாள். கரும்புவில் காமாட்சியின் அடையாளமாகத் திகழ்கிறது.