தாமிரபரணியில் மகாபுஷ்கரம்: ஒரேநாளில் 3 லட்சம் பேர் நீராடினர்
திருநெல்வேலி: தாமிரபரணி புஷ்கர விழாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புனித நீராடினர்.தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா அக்.,11 முதல் 23 வரை நடக்கிறது. நதி துவங்கும் இடமான பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் நீராட நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் கூட்டம் அலைமோதுகிறது.பெரும்பான்மையான மக்கள் நெல்லை மாவட்டம் பாபநாசம் நோக்கி செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அடுத்ததாக துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, குரு தலமான கைலாசநாதர் ஆலயத்தில் அதிக கூட்டம் கூடியது. நேற்று மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தாமிரபரணியில் நீராடினர். வழக்கம்போல திருப்புடைமருதுார், உச்சிஷ்ட விநாயகர், தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை கோயில், எட்டெழுத்து பெருமாள் கோயில் அருகே ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் மாலையில் ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது.