திருப்பூரில் வேப்ப மரத்தில் வடியும் பால் பெண்கள் பக்தி பரவசம்
ADDED :2638 days ago
திருப்பூர்: கோல்டன் நகர் அருகே, வேப்பமரத்தில் பால் வடிந்து கொண்டிருப்பதால், பெண்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோல்டன் நகரில், தங்கமாரியம்மன் கோயில் உள்ளது. அருகே உள்ள தனியார் நிலத்தில், வேப்பமரம் உள்ளது. 20 வயதுள்ள அம்மரத்தில், சில நாட்களாக பால் வடிந்து கொண்டிருக்கிறது என, அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மரத்தின் கிளையில் இருந்து, தொடர்ந்து பால் வடிவதால், சுற்றுப்புற மக்கள் ஆர்வமாக சென்று, அதை பார்த்து வருகின்றனர். மேலும் சிலர், மரத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டும் வருகின்றனர்.
மாரியம்மன் அருளால், இவ்வாறு நடப்பதாக கூறி, மரத்துக்கு ஊதுவத்தி, கற்பூரம் ஏந்தி, மக்கள் வழிபட்டனர்; குறிப்பாக, பெண்கள், பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.