பேளூர் கரடிப்பட்டி மாரியம்மன் கோவிலில் நோன்பு படைத்தல் உற்சவம்
ADDED :2690 days ago
பெ.நா.பாளையம்: பேளூர், கரடிப்பட்டி மாரியம்மன் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு நேற்று (நவம்., 7ல்) நோன்பு படைத்தல் உற்சவம் நடந்தது. கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்த நாள் நோன்பு படைத்தல் விழா கொண்டாடப் படுவது வழக்கம்.
நேற்று (நவம்., 7ல்) இரவு, 7:00 மணிக்கு மேல் சுமங்கலி பெண்கள், தங்களது வீட்டில் இருந்து அரிசிமாவு, அதிரசம், இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்தும், நோன்பு கயிறு, தேங்காய், பழத்தட்டுடன் அம்மன் முன் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், சிறுவர்கள், இளைஞர்கள் கோவில் வளாகத்தில் மாசில்லா பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கை நடத்தியும் உற்சாகத்தோடு கொண்டாடினர். விழாவை முன்னிட்டு, மூலவர், உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.