யோக நரசிங்க பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :2583 days ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு சொர்க்க வாசல் என்னும் பரமபதம் திறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. உத்தமபாளையம் நகரின் மையப் பகுதியில் 600 ஆண்டுகால பழமைவாய்ந்த யோகநரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்டகாலமாக திருப்பணி செய்யாமல் இருந்த இந்தக் கோயில் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மார்கழி பிறந்ததை முன்னிட்டு அதிகாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திரளாக பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் இங்குள்ள ஓம்நமோநாராயணா பக்த சபை நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.