திருப்பரங்குன்றத்தில் சுவாமி தீர்த்த உற்ஸவம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவம் நேற்று நடந்தது. கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை உற்ஸவர் சன்னதியில் சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். மார்ச் 12 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு, புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைக்கு பின்பு தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை ஆகியோர் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்களால் சரவணப் பொய்கை தண்ணீருக்குள் அஸ்தரதேவர் கொண்டு செல்லப்பட்டு, பல்வகை திரவிய அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.