கிள்ளையில் விநாயகர் மேல் சூரிய ஒளி பக்தர்கள் தீபமேற்றி பரவசம்
ADDED :2602 days ago
கிள்ளை:கிள்ளையில் உள்ள கோவிலில் விநாயகர்முகத்தில் சூரிய ஒளி விழுந்த போது, அப்பகுதியினர் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.கிள்ளையில் மிகவும் பழமை வாய்ந்த குறை தீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் முன்னாள்முதல்வர் எம்.ஜி.ஆர்., பிச்சாவரத்தில் இதயக்கனி படப்பிடிப்பின் போது சிறப்பு வழிபாடு நடத்தினார். திரைப்படம் மிகுந்த வெற்றியை பெற்றதால், தற்போது அந்தக் கோவில் எம்.ஜி.ஆர்., கோவில் என்றே அழைக்கப்படுகிறது. மிகவும் சிறிய அளவில் உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் 28, 29,30மற்றும் 31ஆகிய நாட்களில், காலை 6.45 மணி முதல் 7.05 மணிக்குள் விநாயகர் முகத்தில் சூரிய ஒளி விழுவது வழக்கம். கடந்த இரு தினங்கள் நடந்த அற்புத நிகழ்வில் அப்பகுதியினர் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.
பக்தர்கள் குறை தீர்வதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.