பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.வைகாசி திருவிழாவிற்கு மே 7ல் கம்பம் நடப்பட்டு, 15ல் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளினார். நேற்று முன் தினம் (மே., 21ல்) திருவிழா துவங்கியது. அன்று இரவு அம்மன் மின் அலங்கார சப்பரத்தில் ஊர்வலம் வந்தார்.நேற்று (மே., 22ல்) தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்றும் தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுக்கும் வைபவம் நடக்கிறது.
இரவு அம்மன் பூப்பல்லக்கில் வலம் வருகிறார். நாளை பால்காவடி, திருமஞ்சனக்குடம், பால்குட அபிஷேகம் நடக்கிறது. மே 25ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 26ல் அம்மன் மஞ்சள் நீராட்டுடன் ஊர்வலம் வருகிறார். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.