மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.நேற்றுமுன்தினம் இரவு முதல் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும், அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில், குடும்பத்தினருடன் வந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.