வெங்கடாஜலபதி கோயில் ஆனி தேரோட்டம்
ADDED :2353 days ago
சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் நடந்த ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இக்கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா கடந்த ஜூலை 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் நான்கு ரதவீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் சுவாமி எழுந்தருள தேரோட்டம் நடந்தது. பகல் 1:15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. நாராயணா, கோவிந்தா, கோபால கோஷமிட்டபடி பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.