மேட்டுப்பாளையம் ஆற்றங்கரையில் கன்னிமார் பூஜை
மேட்டுப்பாளையம்:ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றங்கரையில், ஏராளமானோர், படையலிட்டு கன்னிமார் பூஜை செய்தனர்.
ஆடிப்பெருக்கு அன்று, பெரும்பாலான மக்கள், ஆற்றில் குளித்து, கரையோரம் உள்ள அம்மன் கோவில்களில் வழிபடுவது வழக்கம். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் நடை, நேற்று (ஆக., 4ல்) காலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள், பவானி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டனர்.
தங்கள் குடும்பத்தில், திருமணம் ஆகாத பெண்கள் இறந்திருந்தால், ஆற்றங்கரையில் கன்னிமார் பூஜை செய்வது வழக்கம். அதன்படி, ஏழு கற்கள் அடுக்கி, சந்தனம், பொட்டு, திருநீர் பூசினர். இனிப்பு, கார வகை பலகாரம் படையலிட்டனர். சிலர் துணிகள் வைத்தனர். தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.