திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் கட்டட இடிபாடுகள்
திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை ஒட்டி தாமிர பரணி ஆற்றுக்குள் கட்டட இடிபாடுகள், பழைய துாண்களை போட்டு நிரப்புவதால் ஆற்றின் போக்கு திசைமாறி வெள்ளம் வரும் போது பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருநெல்வேலி ஜங்ஷன் அருகே தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்து உள்ள குறுக்குத் துறை முருகன் கோயில் உள்ளது.
தாமிரபரணி மழைக்காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தில் இக்கோயில் மூழ்கிப்போகும். பழமையான இந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த சில தினங்களாக இக்கோயிலின் அருகே திருநெல்வேலி டவுன் மேலரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் பழைய கட்டட இடிபாடுகளை தாமிரபரணி ஆற்றின் போக்கை வழிமறித்து கொட்டிச்சென்றுள்ளனர்.
இதனால் பெரு வெள்ளத்தின் போது ஆற்றில் நீரின் போக்கு தடைபடும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தாமிரபரணி ஆற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.