குமாரபாளையத்தில் சக்தி அழைப்பு வைபவம்
ADDED :2356 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரில் சவுண்டம்மன் சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. குமாரபாளையம், காவேரி நகர், தேவாங்க குல பெருமக்கள் சார்பில், பூணூல் பண்டிகை யையொட்டி, ஆறாமாண்டு சவுண்டம்மன் சக்தி அழைப்பு வைபவம் நேற்று (ஆக., 15ல்) நடந்தது.
காலை, 6:00 மணியளவில் கொடியேற்று விழா, 8:00 மணியளவில் பூணூல் அணிதல் நடை பெற்றது. இதையடுத்து, காவிரி ஆற்றிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பவனி வர, சவுண்டம்மன் சக்தி அழைப்பு நடந்தது. வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். பல்வேறு வீதிகளின் வழியாக வந்த சக்தி அழைப்பு, பத்ரகாளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு, அம்மனுக்கு அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.