பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா அலகு, காவடியுடன் நேர்த்திக்கடன்!
ஈரோடு: ஈரோடு ஸ்ரீ பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்து, அலகு குத்தி வந்தனர். 23ம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகமும், காவிரியாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, 10.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், நடு மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடும் விழா கோலகலமாக நடந்தது. 24ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்த துவங்கினர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாளம் முழங்க, கருங்கல்பாளையம் காவிரியாற்றிலிருந்து கோவிலுக்கு தீர்த்தக் குடம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தும் வழிபாடு நடத்தினர். சிறியதாக வாயில் குத்தும் வேல் முதல் பிரம்மாண்டமான விமான அலகு வரை ஆண், பெண் பக்தர்கள் குத்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், மாவிளக்கு படைத்தும் வழிபாடுகளை நடத்தினர். நாளை அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் "பூ மிதித்தல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. 4ம் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலிலிருந்து தேர்வடம் பிடித்தல் மீண்டும் மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 5ம் தேதி மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல், இரவு ஸ்ரீ பெரியமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. 6ம் தேதி மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் சந்நிதி நிலை சேருதல், இரவு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா, காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன் வழக்கப்படி காரை வாய்க்காலில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி காலை 10 மணிக்கு மறு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுப்ரமணியன், தக்கார் தனபாலன் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.