அகிலேஷுக்கு வந்த தைரியம்!
'எப்படியாவது மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சரிதான்...' என்கின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப நகரம் நொய்டா. டில்லிக்கு மிக அருகில் உள்ள இந்த நகரில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்தை திறந்துள்ளன. நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கு வேலை பார்க்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் நொய்டா என்ற பெயரை கேட்டாலே அலறுவர். நொய்டாவுக்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளுக்கு நல்லதே நடக்காது என்ற மூட நம்பிக்கை தான், இதற்கு காரணம். சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், 2012 - 17ல் உ.பி., முதல்வராக இருந்தபோது, நொய்டா பக்கமே தலைவைத்து படுக்கவில்லை; தேர்தல் பிரசாரத்துக்கு கூட நொய்டாவுக்கு அவர் சென்றதும் இல்லை. ஆனால், பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும், இந்த மூட நம்பிக்கையை உடைத்தெறிந்து, பல முறை நொய்டாவுக்கு வந்து சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, இப்போது அகிலேஷ் யாதவுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்த சில மாதங்களில், தொடர்ச்சியாக நொய்டாவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க சம்மதித்துள்ளார். இதை கேள்விப்பட்ட உ.பி., மக்கள், 'நொய்டாவுக்கு செல்ல அகிலேஷ் யாதவுக்கு இப்போதாவது தைரியம் வந்ததே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.