15 நாட்களில் புதிய பாலம்
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே சேதமடைந்த பாலத்திற்கு பதில் 15 நாட்களில் நெடுஞ்சாலைத்துறை யினர் புதிய பாலம் அமைத்துள்ளனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருந்து திருப்பாச்சேத்தி அருகே டி.வேளாங்குளம் கிராமத்திற்கு தார்ச்சாலை உள்ளது. தார்ச்சாலையின் குறுக்கே நீர்வரத்து கால்வாய் மேல் 40 ஆண்டுகளுக்கு முன் குழாய் பதித்து பாலம் அமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாததால் குழாய் பாலம் சேதமடைந்ததால் நவ. 10ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர்கள் மூன்று கி.மீ., தூரம் நடந்து வந்து திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் பஸ் ஏறி சென்றனர். தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை யினர் பழைய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலத்தை 15 நாட்களில் அமைத்து உள்ளனர். நேற்று முன் தினம் முதல் டி.வேளாங்குளம் கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.