உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழகத் தில் தேர்தலுக்கு பின் அமையும் தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழக காங்., நிர்வாகிகள் பலரும் கேட்கின்றனர். ஆனால், தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோர் எங்களிடம் எதுவும் கூறவில்லை. டவுட் தனபாலு: அதெப்படி...? உங்களுக்கு பசித்தால் நீங்க தான் சாப்பிடணும்... கார்கேயும், ராகுலுமா தமிழக அமைச்சர்களாக போறாங்க... ஆட்சியில் பங்கு கேட்டால், ஆளுங்கட்சியான தி.மு.க., கோபித்து கொள்ளும் என்பதாலும், அதுவும் இல்லாம ஆளுங்கட்சியிடம் இப்ப கிடைக்கும் சலுகைகள் பறிபோயிடும் என நீங்க பயப்படுவதும், 'டவுட்' இல்லாம தெரியுது! *******************நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சினிமாவில் உயர்ந்த நடிகராக இருக்கிறார்; அவருக்கென சந்தை மதிப்பு இருக்கிறது. அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், 'மக்களுக்காக என் உச்சத்தை, என் வருவாயை விட்டு விட்டு வந்தேன்' என, அடிக்கடி அவர் கூறுவதை கேட்டால், யார், அவரை சினிமாவை விட்டு வரச் சொன்னது என்ற கேள்வி தான் எழுகிறது. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... 'தமிழகம், தலைவன் இல்லாம தள்ளாடிட்டு இருக்கு... நீங்க வந்து கோட்டையில் முதல்வராக உட்கார்ந்து தான், எங்க தலைவிதியை மாத்தி எழுதணும்'னு எந்த வாக்காளரும் விஜய் வீட்டு வாசல்ல போய் அழுது புலம்பலையே... அவருக்கு சினிமாவுல கிடைச்ச புகழ் போதை போதாமல் தான், அரசியலுக்கு வந்திருக்காரோ என்ற, 'டவுட்'தான் வருது! ******************* தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி: தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 125 சட்டசபை தொகுதிகளில் கவனம் செலுத்த உத்தரவு போட்டு உள்ளார். சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரும், ஆட்சியில் பங்கு, அதிக இடங்களை பெற வேண்டும் என்கிறார். தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, நானும் டில்லி மேலிடத்தில் எடுத்து சொல்வேன். டவுட் தனபாலு: நீங்க மாநில தலைவராக இருந்தப்பவே, உங்க குரலுக்கு உள்ளூர் காங்கிரசாரே மதிப்பு தர மாட்டாங்க... இப்ப முன்னாள் தலைவராகிட்ட சூழல்ல, ஆட்சியில் பங்கு குறித்து எடுத்து சொன்னாலும், உங்க டில்லி மேலிடம் அதை காதுல போட்டுக்குமா என்பது, 'டவுட்' தான்! *******************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 21, 2025 18:49

திரைப்பட பிரபலம் சில காலங்களில், அடுத்த தலைமுறை இளைய கதாநாயகர்கள் நுழைந்தால் சரிய ஆரம்பித்துவிடும் அதற்குள் அரசியலில் ஒரு நிலையான இடத்தில் அமரலாம் என்ற இவரது ஆசையை ஏதோ பெரிய தியாகம் செய்துவிட்டதைப்போல அலட்டிக்கொள்கிறாரே ரஜினியும்தான் ‘இதோ வருகிறேன் , வந்துவிட்டேன்’ என்று கிளித்தட்டு ஆடினார். அரசியலில் ஜெயிப்பது, இரண்டு பெரிய முதலைகளை எதிர்த்து, சாத்தியமில்லை என்று தெரிந்துகொண்டார். 74 வயதிலும் திரைத் துறையில் மட்டுமே focus செய்கிறார். மஹா அலட்டலுடன் நுழைந்த கமல், இன்று அந்த முதலைகளின் ஒன்றில் ஐக்கியமாகிவிட்டார்


Anantharaman Srinivasan
செப் 21, 2025 15:40

தப்பித்ததவறி முதல்வராகி விட்டால், பதவி அதிகாரம் ராஜமரியாதை . தினமும் கோடிக்கணக்கில் சுருட்டலாமே என்ற பேராசைதான்.


Vasan
செப் 21, 2025 08:44

திரு. செல்வ பெருந்தகை ஐயா அவர்களே, நீங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை. தேர்தலில் கூட்டணி என்பது பங்காளி உரிமை போன்றது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் திமுக விற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது. தெய்வத்திரு கருணாநிதி அவர்கள் கேட்டு வாங்கினார், மிரட்டியும் வாங்கினார். தெய்வத்திரு முரசொலி மாறன், திரு தயாநிதி மாறன், திரு அழகிரி, திருமதி கனிமொழி, திரு ராசா, திரு பாலு, என பல உதாரணங்கள் சொல்லலாம். மத்தியில் பங்கு கேட்கும் திமுக, மாநிலத்தில் ஏன் பகிர்வதில்லை? இந்த விஷயத்தில் ஆந்திர மாடல் கடைப்பிடிக்கலாமே. திரு சந்திர பாபு அவர்கள் திரு பவன் கல்யாண் அவர்களை துணை முதல்வர் ஆக்கினார். தேர்தலில் கூட்டணி, ஆட்சியில் பங்கு என்ற ஒப்பந்தத்துடன் 2026 தேர்தல் களத்தில் இறங்குங்கள். திமுக விடம் அடகு வைக்க பட்ட காங்கிரஸ்ஐ மீட்டெடுங்கள். சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள். தெய்வத்திரு நேருவோ அல்லது தெய்வத்திருமதி இந்திராவோ இருந்திருந்தால் காங்கிரஸ் இப்படி இருந்திருக்குமா? திமுக வை நசுக்கி இருப்பார்கள். நான் உங்களை திமுக விடம் சண்டை போட சொல்ல வில்லை. தோழமையாய் தேர்தலை சந்தியுங்கள். பங்காளியாய் ஆட்சியில் பங்கெடுங்கள்.


புதிய வீடியோ