பா.ம.க., தலைவர் அன்புமணி: கடந்த தி.மு.க., ஆட்சியில், 6 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. தற்போது, தி.மு.க., அரசின் ஊழல்கள் மீது, த.வெ.க., அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில், த.வெ.க., அரசு வேகமாக இருந்தது; தற்போது, வேகம் குறைந்து விட்டது. தி.மு.க., அரசில் நடந்த ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கையை, த.வெ.க., அரசு தீவிரப்படுத்த வேண்டும். டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால், 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்ற அவப்பெயர் வருமே... அதனால, ஆற அமர யோசித்து தான் நடவடிக்கை எடுப்பாங்க... அதே நேரம், உப்பு தின்னவங்க கண்டிப்பா தண்ணீர் குடிச்சே ஆகணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: டில்லியில் ஆக., 4ல் நடைபெறும் என் நுால் வெளியீட்டு விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்றால், ஆயிரக்கணக்கான மக்கள் வருவர்; கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், 'நீங்கள் வர வேண்டாம்' என, முதல்வர் விஜயிடம் நானே தெரிவித்து விட்டேன். 'தமிழ் மொழிபெயர்ப்பு நுால் வெளியிடும்போது, விஜய் பங்கேற்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தேன். 'அவசியம் பங்கேற்கிறேன்' என முதல்வர் கூறினார். டவுட் தனபாலு: முதல்வர் விஜய், தமிழகத்தைச் சேர்ந்தவர்... இங்க தான் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்காங்க... டில்லியில வரும் கூட்டம், விஜயின் சொந்த மாநிலமான தமிழகத்துல வராதா...? 'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்' என்ற பழமொழியை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: காவிரி பிரச்னையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போலவே, தற்போதைய முதல்வர் விஜயும், கர்நாடகா சென்று பேசப் போவதாக கூறுவது சரியல்ல. எம்.ஜி.ஆர்., கர்நாடகா சென்றபோது, நம்மிடம் கோர்ட் உத்தரவு இல்லை; இப்போது நம்மிடம் கோர்ட் தீர்ப்பு இருக்கிறது. எனவே, அதோடு இது பொருந்தாது. டவுட் தனபாலு: நீங்க ஆட்சியில் இருந்தப்ப, கோர்ட் உத்தரவுப்படி எத்தனை முறை கர்நாடகாவிடம் தண்ணீரைக் கேட்டு வாங்குனீங்க... கோர்ட் உத்தரவை கர்நாடகா மதிக்காமல் இருப்பதால் தான், பேச்சு நடத்திப் பிரச்னையைத் தீர்க்க முதல்வர் விஜய் முயற்சி எடுக்கிறார்... அதுலயும் குற்றம் கண்டுபிடிக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!