| ADDED : ஜூலை 11, 2026 01:41 AM
மதுரை: மதுரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அகிலேஷின், 'செவ்வாய் கிரக மண்ணில் மின்சாரம் தயாரிப்பது' தொடர்பான கண்டுபிடிப்பு, நாசாவின் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ் 2026' ஆராய்ச்சி திட்டப்போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாசா இப்போட்டிகளை சர்வதேச அளவில் நடத்துகிறது. இந்தாண்டு இப்போட்டியில், 80 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு தலைப்புகளில் புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இறுதியாக, 100 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், மதுரை, சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷின், 'செவ்வாய் கிரகத்தில் உயிரணுக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா' என்பது தேர்வு செய்யப் பட்டுள்ளது. அகிலேஷ் கூறியதாவது: விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் செவ்வாய் கிரகத்தில் இறங்குதல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அங்கு மின்சாரம் மிக தேவை. இது சோலார் அல்லது பேட்டரி மூலம் அங்கு பெறப்படுகிறது. இதற்கு மாற்றாக உயிரணுக்களின் செயல்பாட்டில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் தொடர்பாக கருவியை வடிவமைத்துள்ளேன். இதற்காக செவ்வாய் கிரக மண்ணில் உள்ள வேதியியல் தன்மையை ஆராய்ந்து, அதே வேதித்தன்மையை பூமியில் உள்ள மண்ணில் சேர்த்து, 'செயற்கை செவ்வாய் கிரக மண்' உருவாக்கினேன். அதில் பாக்டீரியாக்களை உருவாக்கி மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்தேன். இது, ஆகஸ்ட்டில் அமெரிக்கா நாசாவின் 'வல்லாப்ஸ் பிளைட் பெசிலிட்டி' என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு, 38 கி.மீ., உயரத்தில் உள்ள பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.