வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எது எப்படியோ, யாராவது ஜெயித்துவிட்டுப் போகட்டும், கணிசமான தொகை, விலை உயர்ந்த பரிசுகள் என்று கொட்டுவதற்கு காரணமான விஜயை மக்கள் வாழ்த்துவார்கள்
மேலும் செய்திகள்
முடிவு உங்கள் கையில்!
10-Apr-2026
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாமானியனும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று சாதித்து காட்டியவர் தான், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டு, 2012ல் கட்சி ஆரம்பித்த கெஜ்ரிவால், 11 மாதங்களில் ௨௦௧௩ல் வந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தார். ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரவை திரட்ட முடியாததால், தன் பதவியை ராஜினாமா செய்தவர், 2015ல் டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் ஆனார். அதைத் தொடர்ந்து, 202௦ தேர்தலிலும் வெற்றி வாகை சூடியதுடன், ௨௦௨௨ல் பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்து, ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக நிலை நிறுத்தினார். இப்படி ஊழலுக்கு எதிரானவராக தன்னை காட்டி கொண்ட கெஜ்ரிவால், மதுபான கொள்முதலில் ஊழல் செய்ததாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பின், அவரது மற்றொரு பக்கம் வெளியாகி, டில்லி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மிகவும் விலையுயர்ந்த மார்பிள் கற்கள், வியட்நாம் நாட்டின் ஆடம்பர திரைச்சீலைகள், அதிநவீன உடற்பயிற்சி கூடம், சானா குளியல் அறை மற்றும் தானியங்கி விளக்குகள் என, பல கோடி ரூபாய் மதிப்பில் ஜொலித்த அவரது ஆடம்பர பங்களாவின் படங்கள் வெளியாகி, 'ஏழைப் பங்காளன்' என்ற அவரது இமேஜை, 'டேமேஜ்' ஆக்கியது. 'மக்கள் ஆணை பெற்றால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன்' என்று சூளுரைத்து, பதவியை ராஜினாமா செய்து, தன் கட்சியை சேர்ந்த அதிஷி மர்லேனாவை முதல்வர் பதவியில் அமர்த்தினார். ஆனாலும், அவரது இந்த, 'அப்பழுக்கற்றவர்' என்ற நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை. விளைவு, 2025 சட்டசபை தேர்தலில் அவரும், அவரது கட்சி வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். தன் தோல்விக்கும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கும் மத்திய பா.ஜ., அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்கிறார், கெஜ்ரிவால். அதேநேரம், தன் கட்சி ஆளும் பஞ்சாபில், அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; அரசுக்கு எதிராக பதிவிட்டால் அவர்கள் மீது வழக்கு பாய்கிறது. இதனால், தங்கள் பேச்சு, எழுத்து சுதந்திரம் ஆபத்தில் உள்ளதாக கூறி, பத்திரிக்கை சுதந்திரம் மீட்பு குழுவினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஏழைப் பங்காளரும், சாமானியர்களில் ஒருவருமான கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆளும் மாநிலத்தில் தான், ஜனநாயகத்தின் நான்காவது துாண் நசுக்கப்படுகிறது. கெஜ்ரிவால் உடைத்தால் அது மண் குடம்; பா.ஜ., உடைத்தால் அது பொன் குடமா? lll திடீர் அக்கறை ஏன்? க.ஹேமமாலினி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை உபயோகப்படுத்திக் கொண்டதாக கூறி, அதற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. 'அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவது கண்டணத்திற்குரியது. இதனால் குழந்தைகளிடம் அழுவது, அடம் பிடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் வாயிலாக பெற்றோரின் ஓட்டுரிமையை பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது' என்று, பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இன்று பெரும்பாலான குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ளனர். பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கூட, சிறார்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்த தடைவிதிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அதுகுறித்து எவரும் பேச முன்வருவதில்லை. கடந்த சில ஆண்டு களாக அதிகரித்து வரும் மது போதை கலாசாரத்தால், சிறார்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆட்படுகின்றனர். சமீபத்தில், கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். இன்று, குழந்தைகள் நலனுக்காக பொங்கும் இவர்கள், இதுபோன்ற அத்துமீறல்களுக்கு உரத்த குரல் எழுப்பவில்லையே... அதை தட்டி கேட்க எந்த குழந்தைகள் அமைப்பும் முன் வந்ததில்லையே... ஏன்? அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் சிறார்கள் கொடி பிடித்துக் கொண்டு திரிகின்றனர்; அரசியல் வாதிகளை வரவேற்க பள்ளிக் குழந்தைகள் வெயிலில் நிறுத்தப்படுகின்றனர். இதை எல்லாம் எதிர்த்து, இதுவரை எந்த குழந்தைகள் அமைப்பும் கேள்வி கேட்டதில்லை. ஆனால், குழந்தைகளிடம், 'உங்கள் பெற்றோரிடம் எனக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள்' என்று விஜய் கூறினார் என்பதற்காக, பெரிய அளவில் கண்டனக் குரல் எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது! இடுப்பு வேட்டி ஆற்றில் அடித்துச் செல்வது தெரியாமல், தோளில் போடும் துண்டு நனைந்து விட்டதே என்று கவலைப்பட்டானாம் ஒருவன்; அதுபோல் உள்ளது, குழந்தைகள் மீதான இவர்களின் திடீர் அக்கறை! lll எவருக்கு வெற்றி? அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் என, இதுவரை இல்லாத அளவு அள்ளிக் கொடுத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளன, இரு திராவிட கட்சிகளும்! குறைந்தபட்சமாக ஓட்டுக்கு, 1,000 -ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும், அதிலும், முன்னாள் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில், ரொக்கத்துடன் தங்க காசுக்கான டோக்கன் வழங்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். தமிழகம் முழுதும், 15,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 75 சதவீத வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் புள்ளி விபரம் கூறுகிறது. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதில் தேர்தலுக்கு தேர்தல் புதுப் புது உத்திகளை கடைப்பிடித்து வரும் இரு திராவிட கட்சிகளிடம் இருந்து தான் இன்று, பிற மாநில அரசியல்கட்சிகளும் கற்றுக் கொண்டு விட்டன. அதிலும், திருமங்கலம் பார்முலா முதல், ஈரோடு இடைத்தேர்தலில் மனிதப் பட்டி பார்முலா வரை உச்சம் தொட்ட கட்சி தி.மு.க., தான்! பறக்கும் படை என்ற பெயரில் வணிகர்களிடம் இருந்தும், மருத்துவச் செலவுக்கு மக்கள் எடுத்துச் செல்லும் பணத்தை கூட கைப்பற்றும் தேர்தல் ஆணையம், திராவிட கட்சிகளின் இந்த பணப் பட்டுவாடாவை மட்டும் கைகட்டி வேடிக்கை பார்த்தது, தேர்தல் கமிஷனுக்கு தெரிந்தே இது நடக்கிறதோ என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் தான், இரு திராவிட கட்சிகளையும் பணத்தை அள்ளிக் கொடுக்க வைத்து விட்டது. இத்தனை அமர்க்களத்தில், யார் வெற்றி பெறப் போகின்றனர் என்பது, நாளை தெரியும்! lll
எது எப்படியோ, யாராவது ஜெயித்துவிட்டுப் போகட்டும், கணிசமான தொகை, விலை உயர்ந்த பரிசுகள் என்று கொட்டுவதற்கு காரணமான விஜயை மக்கள் வாழ்த்துவார்கள்
10-Apr-2026