ரா.தங்கசாமி, நெல்லையில் இருந்து எழுதுகிறார்: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும்முன், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளும், ஜனநாயக அமைப்பை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக பார்லிமென்ட், சட்டசபை நடவடிக்கை குறித்த மாதிரி வகுப்புகளும் நடத்தப்பட்டன. அதேபோன்று, நீதி, நேர்மை, தர்மம், சட்டங்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனை குறித்தும் போதித்தனர், ஆசிரியர்கள். அதனால், மாணவர்களிடம் ஓர் ஒழுங்கு இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மது கலாசாரம் புகுந்து கொண்டது. அதிலும், தற்போதைய அரசு, மதுவில் காட்டும் தாராள மயத்தால், மாநிலம் முழுதும் மது பழக்கம் மிக அதிகமாகி, தற்போது பள்ளி மாணவர்களையும் தொற்றிக் கொண்டு வருகிறது. இதனால், சிறார் குற்றங்களும் அதிகரிக்கின்றன. நாட்டு மக்களை குடிக்க வைத்து, அதன் வாயிலாக அரசை நடத்த நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இதற்கெல்லாம் விடிவு பிறக்காது. அதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுடன் நின்று விடாமல், அவ்வப்போது பள்ளிக்கு சென்று தங்கள் பிள்ளைகளின் கல்வி, நடவடிக்கைகள் குறித்து ஆசிரியரிடம் விசாரித்து அறிந்து கொள்வதுடன், எப்போதும் தங்கள் கண்காணிப்பு வளையத்தில் அவர்களை வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் கடமைக்கு பாடம் நடத்தினோம்; சம்பளம் வாங்கினோம் என்று இல்லாமல், சமூக அக்கறையுடன், நன்னெறி கருத்துக்களை மாணவர்கள் மனதில் ஆழப்பதியும்படி கற்பிக்க வேண்டும். மேலும், குற்றங்களும், அதற்கு கிடைக்க இருக்கும் தண்டனைகள் குறித்து தினமும் வகுப்பறை கரும்பலகைகளில் எழுதி, அதை ஒவ்வொருவரையும் வாசிக்க செய்ய வேண்டும். இளம் பிள்ளைகள் என்பதால், இக்கருத்துக்கள் பசுமரத்து ஆணி போல் அவர்கள் மனதில் பதிந்து போகும். அதனால், அவர்கள் குற்றச்செயல்களை செய்ய பயப்படுவர். எதிர்கால சமூகம் ஆரோக்கியமான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்றால், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கூட்டு முயற்சி என்பது காலத்தின் கட்டாயம்! பழனிசாமி முட்டுக் கொடுக்க முடியாது! பி.என்.கபாலி, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை விவாதத்தின் போது, 'சென்னை
மதுரவாயல் மேம்பால திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா தான்' என்று சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன்
குற்றஞ்சாட்டினார். அதற்கு, 'துாண்களால் கூவம் நதியின் நீரோட்டம்
பாதிக்கப்படும் என்பதால் தான், அத்திட்டத்திற்கு மறுப்பு
தெரிவிக்கப்பட்டது' என காரணம் கூறினார், அ.தி.மு.க., பொதுச்செயலர்
பழனிசாமி. உண்மையில், அது கருணாநிதி அரசின் திட்டம் என்பதாலேயே அதை தடுத்தார், ஜெயலலிதா. மொத்தத்தில், இவர்களின் லாவணி கச்சேரியால் பாதிக்கப்பட்டது என்னவோ, சென்னை மக்கள்தான். கடந்த 15 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம் செய்வோர் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். எந்தப் பயனும் இன்றி அங்கு நிற்கும் துாண்கள், போக்குவரத்து இடைஞ்சலை
ஏற்படுத்துகிறது. இத னால், அவ்விடத்தை கடக் கவே அரை மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே, கருணா நிதியின் திட்டங்களை தொடரக்கூடாது என்பதை, தன் கொள்கையாகவே வைத்திருந்தார் ஜெயலலிதா. கருணாநிதி தன் ஆட்சிகாலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்க நினைத்தார்.
ஆனால், ஆட்சி மாறியதும், 'மோனோ ரயில் திட்டம் தா ன் துவக்கப்பட வேண் டும்'
என்றார், ஜெயலலிதா. மோனோ ரயில் திட்டம் பாதுகாப்பு குறைவானது,
நிலத்தடியில் அமைக்க முடியாதது, குறைந்த அளவு மக்களுக்கே பயன் தர கூடியது
என்பது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. இதேபோன்று தான், ஓமந்துாரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட தலைமை செயலகம்! அக்கட்டடத்தில் ஏதாவது குறை இருந்திருந்தால், அதை சரிசெய்து, தற்போதைய
தலைமை செயலகத்தை விட அதிக வசதிகள் கொண்டதாக அதை மாற்றியிருக்கலாம். ஆனால், அக்கட்டடத்தில் நுழைய மாட்டேன் என்று வீம்பு பேசி, அதை மருத்துவமனையாக மாற்றினார். அதேபோன்று, கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்ட பொது நுாலகத்தை செயல்பட
விடாமல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானார்; இந்தியா முழுதும்
ஏற்றுக்கொண்ட, 'வாட் வரி' விதிப்பு முறையை, தான் மட்டும் ஏற்க மறுத்து
பிடிவாதம் பிடித்தார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதித்து, தன் விருப்பம் போலவே நடந்து கொண்டவர் ஜெயலலிதா. பொதுவாக, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் கருணாநிதி ஆர்வம்
காட்டுவார். திட்டத்திற்காக ஒதுக்கப்படும் பணத்தில், தானும் கொஞ்சம்
ஒதுக்கிக் கொள்ளலாமே என்ற எண்ணம் இருந்தாலும், தன் பெயர் சொல்லும் விதமாக
கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவ்வகையில், அவர் அமைத்த பயனற்ற மணிமண்டபங்கள், சிலைகள், கோட்டங்களை
தவிர்த்து, 1970களில் கட்டிய அண்ணா மேம்பாலம் துவங்கி, சென்னையில் பல
மேம்பாலங்கள் முதல், கோயம்பேடு பேருந்து நிலையம், எண்ணற்ற அரசு கட்டடங்கள்
அவர் ஆட்சிக் காலத்தில் அமைத்தவை தான். எனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ஜெயலலிதாவின் செயலுக்கு, பழனிசாமி முட்டுக் கொடுக்க முடியாது! பெருமை பேசலாமா? க.ஹேமமாலினி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதையே, தன் கொள்கைகளில் ஒன்றாக
வைத்துள்ளது, திராவிட மாடல் அரசு. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில்,
'குரூப் 2, 2ஏ' தேர்வில் அரசு காட்டிய அலட்சியம்! ஒவ்வொருவரும் பல கனவுகளோடு இரவு - பகல் துாங்காமல் படித்தும், பயிற்சி எடுத்தும் தேர்வு எழுத வருகின்றனர். ஆனால், தமிழக அரசின் தேர்வாணையத் துறையோ, 'குரூப் 2, 2ஏ' தேர்விற்கு
தேர்வு மையம் ஒதுக்குவதில் குளறுபடி செய்து, தேர்வு எழுத வருவோரை
டென்ஷனாக்கி, பின், தேர்வையே ரத்து செய்துள்ளது. இத்தனைக்கும்
சென்னையில், வெறும் ஏழு மையங்களில் தான் தேர்வுகள் நடக்க இருந்தது; அதைக்
கூட முறையாக ஒழுங்குபடுத்த முடியவில்லை இந்த அரசால்! இதில்,
வாராவாரம் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிப்பதும், அது செயல்பாட்டிற்கு வந்து
விட்டது போல், விளம்பரம் செய்தும் பெருமை பேசுகிறார், தி.மு.க., முதல்வர்
ஸ்டாலின். கடந்த நான்கரை ஆண்டுகளாக, முதல்வர் பெருமை தான் பேசுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை காணோம்!