கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:  ஜாதி, சனாதனம் மற்றும் மது ஒழிப்பு கொள்கை கொண்ட வி.சி., தலைவர் திருமாவளனுக்கு சில கேள்விகள்... பட்டியலின மக்களின் நலனுக்காக கட்சி ஆரம்பித்த நீங்கள், இதுவரை அம்மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன?  வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தபோது, அம்மக்களுக்காக  நீங்கள் முன்னெடுத்த போராட்டம் தான் என்ன?  திருச்சியில் மாநாடு நடத்தி, அகில இந்திய அளவில் மது ஒழிப்பு பிரசாரம் செய்த நீங்கள், மது விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க.,விடம் எதிர்ப்பை காட்டாதது ஏன்? மும்மொழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள்,  சி.பி.எஸ்.இ., பள்ளியை நடத்துவது கூட,  தமிழ் மொழி வளர்ச்சிக்கு தானோ!	'அடங்க மறு, அத்துமீறு, திமிரி எழு, திருப்பி அடி'  என்று தொண்டர்களிடம் வீர முழக்கம் இடும் நீங்கள், தி.மு.க.,விடம் பம்முவது சீட்டுக்கும், நோட்டுக்கும் இல்லை என்றால், வேறு எதற்காக? 	ஹிந்து முன்னணியினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினால், அது சங்கிகள் மாநாடு என்றும், மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர் என்று சொல்லும் நீங்கள், தி.மு.க., முருகன் மாநாடு நடத்தியது எதற்காக என்பதை கூற மறுப்பது ஏன்?	'பிரதமர் பதவியே அதிகாரமிக்கது; அந்த இடத்தை அடைவது தான் லட்சியம்' என்று கூறும் நீங்கள், வரும் தேர்தலிலாவது உங்கள் பானை சின்னத்தில் போட்டியிடுவீர்களா அல்லது பானையை, தி.மு.க.,விடம் அடகு வைத்து, சீட் பெறுவீர்களா?  அறிவாளிகள் போட்ட சாலை!
பொ.ஜெயராஜ், 
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' 
கடிதம்:  சாலை ஓரத்தில் ஒருவர் குழிகளை தோண்டிக் கொண்டே செல்கிறார், 
பின்னால் வருபவரோ அக்குழிகளை மண்ணை போட்டு மூடியபடி வருகிறார். அதற்கு பின்
 வருபவர் மூடிய குழிகளில் தண்ணீர் ஊற்றியவாறு செல்கிறார்.இதை 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோருக்கு எதற்கு இப்படி செய்கின்றனர் என்பது
 புரியவில்லை. அதுகுறித்து விசாரிக்கவே, அவர்களில் ஒருவர், 'ஐயா... நாங்கள்
 அரசு ஊழியர்கள்;  மரக்கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டுவது என் வேலை. 
அக்குழியில் மரக்கன்றை நட வேண்டியது இரண்டாவது நபரின் வேலை. 'அக்குழியை
 மண்ணைப் போட்டு மூடுவது மூன்றாவது நபரின் வேலை. அதற்கு தண்ணீர் ஊற்றுவது 
நான்காவது நபரின் வேலை. இன்று மரக்கன்றை நட வேண்டிய இரண்டாவது நபர் 
வரவில்லை. ஆனாலும், வேலை செய்யாமல் சம்பளம் வாங்கக் கூடாது என்பதால், 
நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம்...' என்றாராம்! அரசு ஊழியர்களை 
கிண்டல் செய்வதற்காக கூறப்பட்டது தான் இக்கதை என்றாலும், இதை மெய்ப்பிப்பது
 போல், பீஹார் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது... பீஹார், 
ஜெகனாபாத் மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் செலவில், 7.48 கி.மீ., 
துாரத்திற்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு இடையூராக  
இருந்த மரங்களை வெட்டி அகற்றும்படி வனத் துறையினரிடம், மாவட்ட நிர்வாகம் 
கோரிக்கை வைத்தது. வனத்துறை ஏற்க மறுத்ததால், மரங்களுக்கு இடையே சாலையை அமைத்து, தங்களின் கடமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.அரசு
 அதிகாரிகளின் இந்த முட்டாள்தனமான வேலையால், வாகன ஓட்டிகள் மிகவும் 
சிரமப்பட்டு மரங்களுக்கு இடையே வாகனங்களை இயக்குகின்றனர்.  இதனால், 
அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறதாம்.  இதைக் காரணமாக வைத்து, இனி 
மரங்களை அகற்றுவர். புதிதாக  போடப்பட்ட சாலை வீணாகும். பின்பு மறுபடியும் 
பலகோடி ரூபாய் செலவு செய்து, மீண்டும் சாலை போடுவர். அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் களால் மக்களின் வரிப் பணம் தான் வீணாகிறது! எப்போது தான்  சாலை அமைப்பர்?
டி.குமரன்,
  சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிழக்கு கடற்கரை 
சாலையின் ஒரு பகுதியான, துாத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, 
நான்குவழி சாலையாக மாற்றப்பட உள்ளதாக கடந்த 15 ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
 ஆனால், சாலை பணிகள் எப்போது துவங்கும் என்று தான் தெரியவில்லை. இவ்வழியில்
 உள்ள துாத்துக்குடி, திருச்செந்துார்,  குலசேகரன்பட்டினம், மணப்பாடு, 
உவரி, ஆற்றங்கரை பள்ளிவாசல், கூடன்குளம் மற்றும் கன்னியாகுமரி போன்ற 
ஊர்களில் தொழிற்சாலை, வர்த்தகம், துறைமுகம், ராக்கெட் நிலையம், அனல் 
மற்றும் அணு மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மிகுந்த 
பகுதிகளும், சுற்றுலா தலங்களும் உள்ளன. ஆனாலும், ஏனோ நான்குவழி சாலை அமைப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து
 தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் விசாரித்தபோது,  நான்குவழி சாலை 
பணிகள்,  தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு,  மூன்று 
ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பக்கட்ட பணிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டதாக 
கூறுகின்றனர். மாநில நெடுஞ்சாலை துறையோ எந்த பூர்வாங்க வேலையும் 
செய்யவில்லை. ஆனால், பணிகள்நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிலம் 
கையகப்படுத்தப்படும் என்றும் கடந்த இரு ஆண்டுகளாக கூறுகின்றனரே  தவிர, 
உருப்படியாக எதுவும் செய்வதாக தெரியவில்லை.மத்தியில் ஆளும் பா.ஜ., 
அரசு, 11 ஆண்டுகளில் நாடு முழுதும், 396 லட்சம் கி.மீ., துாரம் 
நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில், 
4,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறுகிறது.   தமிழக
 அரசோ, நான்கு ஆண்டுகளில், 17,000 கோடி ரூபாய் மதிப்பில், 9,600 கி.மீ., 
துாரம் சாலைகள் போட்டுள்ளதாக கூறுகிறது.  அப்படியெனில்,  கிழக்கு கடற்கரை 
சாலையின் தென்கோடியில், 120 கி.மீ., துாரமே உள்ள துாத்துக்குடி - 
கன்னியாகுமரி சாலையை மட்டும் புறக்கணிப்பது ஏன்?துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.  கன்னியாகுமரிக்கு
 வரவேண்டிய துறைமுகம் கேரளாவுக்கு சென்று விட்டது. கடற்கரை கிராமங்களில் 
நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளதால், விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி 
உள்ளது. வெளியூர்களுக்கு சென்று தங்கள் கடின உழைப்பால் முன்னேறிய இப்பகுதி 
மக்களும், சொந்த ஊரைப்பற்றி கவலைப்படுவதில்லை.எனவே,  மத்திய - மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி,  இச்சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்!