உள்ளூர் செய்திகள்

 இது உங்கள் இடம்

அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்வது!எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், 2021ம் ஆண்டு தேர்தலின்போது, 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, அவை, தன் விடியல் ஆட்சியில் நிறைவேற்றி வைக்கப்படும் என்று உறுதி அளித்து தேர்தலை சந்தித்தார்.தமிழக மக்களும் அதை நம்பி, முதன் முறையாக, ஸ்டாலினை அரியணை ஏற்றினர்.ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில், அவர் அளித்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், ஊழல் பெருகிவிட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். 'ஒரு தவறான ஆட்சியை தேர்வு செய்து விட்டோம்' என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.'நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து, மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம்' என்று சொன்னதற்கு மாறாக, மது விற்பனையும், போதைப் பொருள் நடமாட்டமும் கட்டுக்கடங் காமல் பெருகி விட்டதை தமிழக மக்கள் பார்க்கின்றனர்.பள்ளிச் சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர மக்கள், ஏன் பெண்கள் கூட மது பழக்கத்திற்கு ஆளாகி, நிம்மதியான வாழ்க்கையை இழந்து விட்டனர்.ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான பகுதி, டாஸ்மாக்குக்கு சென்று விடுவதால், குடும்ப பெண்கள் அடையும் துன்பத்திற்கு அளவே கிடையாது.இந்த ஆண்டு பொங்கல் பரிசாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரசு, 3,000 ரூபாய் வழங்கியது. பொங்கல் விடுமுறையான இரண்டு நாட்களில் மட்டும், டாஸ்மாக் விற்பனை, 435 கோடி ரூபாயை எட்டிவிட்டது.டாஸ்மாக்கில் சரக்கு வாங்குபவர்கள் யாரென்று கவனித்தால், சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளிகள், நடுத்தர வயது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்.இந்த அளவிற்கு போதைக்கு அடிமையாகியுள்ள மக்களை எவ்வாறு கரை சேர்ப்பது என்ற புத்திசாலித்தனம், மக்களின் நலமான, மகிழ்ச்சியான வாழ்வில் அக்கறை உள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் தி.மு.க., அரசுக்கு இல்லவே இல்லை.இந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பாத யாத்திரை கிளம்பினார்; அதையும் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். எத்தகைய நாடகம் இது!'குடிப்பழக்கம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள பெண்கள், டாஸ்மாக் கடை திறந்து மூடும் வரை அதன் வாசலில் நின்று கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் போதையை ஒழிக்க முடியும்' என, கடையைத் திறந்து வைத்துள்ள, பாதயாத்திரையைத் துவக்கி வைத்த அந்த முதல்வரே சொல்கிறார் என்றால், இந்த அசட்டுத் தனத்தை என்னவென்று சொல்வது!பிரதமரைஅவமானப்படுத்துவதை தி.மு.க., ஆதரிக்கிறதா? வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப் பிய, 'இ - -மெயில்' கடிதம்: ' ஜனநாயகன் திரைப்படம் வெளியாக தாமதமாவதற்கு, பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் தான் காரணம்' என்று, மலிவான அரசியல் செய்து வருகிறது தமிழக காங்கிரஸ். காங்கிரஸ் தான் இப்படியென்றால், தி.மு.க., முதல்வரும் அதற்கு ஒத்து ஊதுகிறார். எம்.ஜி.ஆர்., நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியும், படத்தை வெளியிட முடியாத அளவுக்கு, கட்சி குண்டர்களை வைத்து நெருக்கடி கொடுத்தவர், கருணாநிதி என்பதை அவர் அறியவில்லை போலும்! அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் கொல்லப்படுவது குறித்து இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களும், முதல்வரும் இதுவரை சிறு கண்டனக் குரல் கூட எழுப்பவில்லை. அதேநேரம், ஒரு திரைப்படம் வெளியாக தாமதமாகிறது என்றதும், ஆளாளுக்கு குரல் எழுப்புகின்றனர். கடந்த ஆண்டு கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர்பலியை வைத்து அரசியல் செய்து, நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கு முடிவுரை எழுத துடித்தவர்கள், இன்று படம் வெளியாகவில்லையே என்று கவலைப்படுகின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தில் பிரதமர் மோடியை போன்று தோற்றமுள்ள ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அவரை விஜய் சவுக்கால் அடிப்பது போன்று ஒரு காட்சியை வைத்துள்ளதாக, பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அது உண்மையெ ன்றால், நம் நாட்டின் பிரதமரை அவமானப்படுத்தும் செயலை, தமிழக முதல்வரும், காங்கிரசும் ஆதரிக்கின்றனரா? பகல் உணவுடன் மது பாட்டில்கள்'டோர் டெலிவரி?' ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலை எதிர்கொள்ளும் யுக்தியாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குவோம்' என்றும், 'இலவச பேருந்து பயணம் ஆண்களுக்கும் வழங்கப்படும்' என்றும் அறிவித்துள்ளார். ஆட்சியை பிடிக்க இப்படி இலவச திட்டங் களை மக்களிடம் அறிமுகம் செய்வதும் லஞ்சமே. 'ஒருவனை ஏமாற்ற வேண்டும் எனில், அவனது ஆசையை துாண்டு' என்ற வசனம் இங்கு, கனகச்சிதமாக பொருந்துகிறது! லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் உள்ள தமிழ்நாடு, ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை, வட்டியாக செலுத்திவரும் நிலையில், இத்தகைய இலவச அறிவிப்புகள் வாயிலாக, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான்... அதாவது, 'ஆட்சியை பிடிப்பதே கட்சிகளின் லட்சியம்; நாட்டைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை' என்பதே! இலவசங்களை லஞ்சமாக தர அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி, பரப்புரை செய்வதை, தேர்தல் ஆணையம் தடுக்க முடியாதா? இப்படி இலவசங்களை காட்டியே, இன்னும் எத்தனை காலம் வண்டி ஓட்டுவர் நம் அரசியல்வாதிகள்? இதையே முன்னுதாரணமாக்கி, இன்னும் பல கட்சிகள், இலவசங்களை அள்ளி வீசப் போவதை பார்க்க தான் போகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதத்தில் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில், பகல் உணவுடன், 'மது பாட்டில்களும் இலவசமாக வீட்டிற்கு வீடு டோர் டெலிவரி செய்வோம்' என்று, ஏதேனும் ஒரு கட்சி அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்க, தமிழகத்தின் ஜனநாயகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ