கள்ள மவுனம் ஏன்?
ப. ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை; இத்திட்டத்தால் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா. கடந்த 2018ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்துள்ளோம் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். காவேரியின் குறுக்கே உள்ள மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் தடுக்கப்படும். இதனால், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், மேகதாதுவில் அணை கட்ட, பல ஆண்டுகளாக கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், அணை கட்டும் முயற்சி இழுபறியில் உள்ளது. இந்நிலையில், 'தமிழகத்தின் அனுமதி இல்லாமல், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது' என்று கூறியுள்ளார், கர்நாடகாவை சேர்ந்த மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி. ஆனாலும், அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேவையில்லாமல், எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தை வைத்து மல்லுகட்டி, நேரத்தை விரயமாக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்களுக்கு, மேகதாது விஷயம் கண்ணில் படாமல் போனது ஏனோ? 'காங்கிரஸின் இளம் தலைவரான ராகுல், தனிப்பட்ட முறையில் என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. ராகுலை நான் சகோதரர் என்று அழைக்க காரணம், அவர் என்னை அண்ணன் என்று அழைப்பதுதான். நான் அவருக்கு மூத்த அண்ணன்' என்று ராகுல் மீது பாசமழை மொழியும் முதல்வர், தன் தம்பி ராகுலிடம், 'மேகதாது அணை கட்டினால், தமிழகத்தின் விவசாயம் பாதிக்கப்படும்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதனால், சித்தராமையாவிடம் அணை கட்ட வேண்டாம் என்று கூறுங்கள்' என்று அன்பு கட்டளை இடலாமே... ஏன் செய்யவில்லை? 'தி.மு.க.,வும், காங்கிரசும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற்றுமைக்காக ஒரே சிந்தனையில் பயணிக்கிறோம்' என்று கூறிய ஸ்டாலின், அதே தமிழகத்தின் வளர்ச்சிக்காக பேசாமல், மேகதாது அணை விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? lll செவிசாய்க்க மாட்டார்கள்! சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆளும் தி.மு.க., அரசும், அதன் கூட்டணி கட்சிகளும், தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தமிழகமெங்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அவற்றுள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டமும் ஒன்று! வழக்கம் போல் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, பணம் கொடுத்து மக்களை கூட்டத்திற்கு வரவழைத்திருந்தனர். ஆனால், 'சோறு போட்ட புண்ணியவான், தொண்டைய நனைக்க தண்ணீர் தர மறுத்துவிட்டான்' என்ற வசைமொழி சொலவடை போல், பணம் கொடுத்து மக்களை அழைத்து வந்தவர்கள், திரும்ப அவர்களை ஊரில் கொண்டு போய் விடாமல் கம்பி நீட்டி விட, பாவம்... 200, 300 ரூபாய்க்காக வந்த அப்பாவி மக்கள், கோவை நகரில் நிர்கதியாக தவித்துக் கொண்டிருந்தனர். பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழித்தடங்களை ரத்து செய்திருந்ததால், கூட்டத்திற்கு வந்த மக்களுடன் சேர்ந்து, கோவை மக்களும் அவதிக்குள்ளானது தான் மிச்சம்! இதனால், கூட்டத்திற்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்று தி.மு.க.,வினர் நினைத்தனரோ, அதைவிட அதிகமாக, அவதிப்பட்ட மக்களின் வசைமொழிகளுடன் நன்றாகவே விளம்பரம் கிடைத்தது. தாய் மற்றும் உறவினருடன் வந்த இளம்பெண்ணை, திருவண்ணாமலையில் போலீசாரே பாலியல் பலாத்காரம் செய்தது, கோவை மாணவி கூட்டு பலாத்காரம் என்று தமிழகம் மது மற்றும் மாது போதையில் தள்ளாடுகிறது. அரசின் நிர்வாக தள்ளாட்டத்தை தாங்க முடியாத மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, எதிர்ப்பு கூட்டங்கள் என்ற பெயரில் பிரசார கூட்டங்களை நடத்தி, கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர், தி.மு.க.,வினர். சாதனை செய்ய முடியாதவர்கள் போதனை செய்ய வந்தால், வேதனையில் உள்ள மக்கள் போதனைக்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்பதை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அறியவில்லையே! lll எளிதாக விண்ணப்பிக்கலாமே! வனிதா ராம், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்படிவம் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருவதுடன், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. ஆதாரில் உள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒரே மாதிரி இருந்தால் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எங்கள் குடும்பத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே மாதிரி பெயர் இருந்த இருவருக்கு ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்தோம். அதேபோன்று, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையில் பெயர் மாறி இருந்த உறவினருக்கு, ஆதாரில் உள்ளபடி வாக்காளர் அடையாள அட்டையிலும்பெயரை திருத்தம் செய்ய விண்ணப்பித்தோம். இந்த திருத்தம் சரி செய்யப்பட்டு வந்ததும், எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்து விடுவோம். இந்த ஆன்லைன் விண்ணப்பத்திற்கு கணினியைக் கூட பயன்படுத்தவில்லை. ஸ்மார்ட் போன் வாயிலாகவே விண்ணப்பித்து விட்டோம். வீட்டில் ஒருவரிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் கூட போதும்; அதன்வாயிலாக வீட்டில் உள்ள அனைவருக்கும் விண்ணப்பிக்கலாம்! ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் மற்றும் அதன் வாயிலாக விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கும் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசியாக, 2002 - 2005ல் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நமக்கு தேவையான விபரங்களை அதிலிருந்து எடுத்துக் கொ ள்ளலாம். எவ்வளவோ இலவச திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இ - சேவை மையம் வாயிலாக, எஸ்.ஐ.ஆர்., சேவைகளை இலவசமாக வழங்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே! lll