சோம்பேறிகள் ஆக்கும் அரசு!
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில், ஏற்றுமதியாளர்கள், சுங்க வரித்துறை சார்ந்த புகார்களை பதிவு செய்வதற்கான 'துணைவன்' போர்ட்டல் துவக்க விழா நடந்தது.இதில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் பேசுகையில், 'திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வசம், வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பங்கள் உள்ளன. அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளித்து திறன் மேம்படுத்தப்படுகிறது. 'தமிழகத்தில் இலவச காஸ், இலவச வீடு, இலவச அரிசி, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் என அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன. இங்குள்ள யாருக்கும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என்றார்.ஏற்றுமதியாளர் ஒருவர், 'நம்ம மக்களை சோம்பேறிகள் ஆக்குவதே அரசு தான்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.