பயந்ததை ஒப்புக்கிறாங்களா?
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், சமீபத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், சிறுகுறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசும்போது, 'தி.மு.க.,வை ஊழல் கட்சி என, பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், நீங்கள் கைகோர்த்துள்ள கட்சியினர் நேர்மையானவர்களா... ஜெ., உயிரோடு இருந்திருந்தால், ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்திருப்பார்; அ.ம.மு.க., தினகரன் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. 'தற்போது, அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, வரி உயர்வு பற்றி பிரசாரம் செய்கின்றனர். ஆனால், 'உதய் மின்' திட்டத்தில் கையெழுத்திட்டு, மின் கட்டண உயர்விற்கு காரணமானவர்கள் தான், அ.தி.மு.க., வினர். 'உள்ளாட்சி நிர்வாகத்தில் வரிகளை ஏற்றாவிட்டால் மானியம் கிடைக்காது' என்று மத்திய அரசு மிரட்டியதால் மட்டுமே, தற்போது வரி ஏற்றப்பட்டுள்ளது' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்ப, மத்திய அரசு மிரட்டலுக்கு பயந்துட்டதை இவங்க ஒப்புக்கிறாங்களா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.