நம்ம தலைவரே குஷியாகிட்டாரு!
சென்னை, அண்ணா நகரில் உள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வீட்டுக்கு, முதல்வர் விஜய் சமீபத்தில் சென்று வாழ்த்து பெற்றார். இந்த தகவல் வெளியானதும், வைகோ வீட்டை சுற்றி மக்கள் கூட்டம் குவிந்தது. வீட்டுக்குள் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ரசிகர்கள், கட்சியினர் என, தெருவே திருவிழா கோலத்துக்கு மாறியது. இதை பார்த்த ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'நம்ம தலைவர் வீட்டு வாசல்ல, இவ்வளவு கூட்டத்தை என் வாழ்நாள்ல பார்த்ததே இல்லப்பா... தலைவர் தேர்தல் பிரசாரத்துக்கு கூட இவ்வளவு பேர் வரலையே...' என்றார். அதற்கு, பக்கத்தில் நின்றிருந்த தொண்டர், 'அண்ணே... விஜயை பார்த்ததும், நம்ம தலைவரே குஷியாகிட்டாரு... மக்கள் குஷியாக மாட்டாங்களா...' என கூற, சுற்றியிருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.