| ADDED : ஆக 11, 2025 10:28 PM
துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பேசிய விவசாயிகள் பலரும், தாங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் யாரும் முறையாக பதில் தருவதில்லை என, குற்றம் சாட்டினர். அவர்களுக்கு பதிலளித்து பேசிய கலெக்டர் இளம்பகவத், 'நான் கலெக்டராக பொறுப்பேற்றது முதல், விவசாயிகளிடம் இருந்து வரும் மனுக்களுக்கு உரிய பதிலை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அதை அதிகாரிகள் யாரும் கடைப்பிடித்ததாக தெரியவில்லை. 'கடந்த கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு, அடுத்த கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் வரை பதில் அளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளீர்கள்; அது தவறானது. இனிமேல் வரும் மனுக்களுக்கு ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதிலை அளிக்க வேண்டும்' என, கடுமையாக எச்சரித்தார். இதை கேட்ட விவசாயி ஒருவர், 'கலெக்டர்இவ்வளவு ஸ்ட்ரிக்டா இருந்தும், அதிகாரிகள் அசர மாட்டேங்கிறாங்களே...' என, முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.