| ADDED : ஏப் 16, 2026 11:42 PM
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுதர்சனத்திற்கு ஓட்டு கேட்டு, அக்கட்சியின் துணை பொதுச் செயலர் கனிமொழி, சமீபத்தில் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்தார். அப்போது, 'மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு எவ்வளவு கிடைக்கப் போகிறது?' என, அங்கிருந்த பெண்களிடையே கேட்டார். பலர் இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர். உடனே கனிமொழி, 'தி.மு.க., கூட்டத்தில் இரட்டை விரலை காட்டுகிறீர்களே' என்றார். உடனே, கூட்டத்தினர் ஐந்து விரலை காண்பித்தனர். அதிர்ச்சியடைந்த கனிமொழி, 'ஐந்து விரல் காட்டும் அளவுக்கு தர முடியாது' என்று சமாளித்தவர், தொடர்ந்து பேசினார். கூட்டத்தில் இருந்த ஆண் ஒருவர், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், உரிமைத்தொகை எல்லாம் தர்றாங்க... நமக்குதான் ஒண்ணும் தர மாட்டேங்கிறாங்க பா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.