பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை, முனைவர் பட்ட ஊக்கத்தொகை, பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்கள், 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனாலும், அவர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. இனியும் தாமதிக்காமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசும், அண்ணாமலை பல்கலையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இப்ப இருக்கும் நிதி நெருக்கடியில், அவங்களது கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குரியது தான்!அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை:கடந்தாண்டு இந்தியா முழுதும், 6,850 மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசு அறிவித்தது; இதில், தமிழகத்திற்கு, 350 இடங்களை அறிவித்தது. அரசு மருத்துவக் கல்லுாரிக்கு எத்தனை இடங்கள் என தேடி பார்த்தால், ஒரு இடம் கூட இல்லை. அத்தனையும் தனியார் கல்லுாரிக்கு தான் கிடைத்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், தேசிய அளவில் 4வது இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை, தற்போது, 7வது இடத்திற்கு சென்று விட்டது. இந்த நாலரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், புதிதாக எந்த அரசு மருத்துவ கல்லுாரியும் துவங்காமல் விட்டதன் விளைவுதான் இது! தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேச்சு: தமிழ் சமுதாயம் வளரவும், அவர்கள் வாழ்வு மேம்படவும் தி.மு.க., என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்போது கட்சி ஆரம்பித்தவர்கள், நாற்காலி படம் போட்டு, 'வருங்கால முதல்வர்' என அழைக்கின்றனர். அவர்களுக்கு கொள்கை கிடையாது; ஆனால், தி.மு.க., அப்படி கிடையாது. தி.மு.க.,வை துவங்கி, 76 வருஷங்களாகிடுச்சு... கிட்டத்தட்ட, 25 வருஷத்துக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தமிழ் சமுதாயம் வளரவும், அவங்க வாழ்வு மேம்படவும் எதுவுமே செய்யலையா? மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஹாஜா கனி பேச்சு: 'ஒரு தேர்தலின் முடிவை வாக்காளர்கள் தீர்மானிப்பதில்லை. ஓட்டு எண்ணுபவர்களே தீர்மானிக்கின்றனர்' என, ரஷ்ய அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த நிலைமை தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். ரஷ்யா ஸ்டாலின் காலத்துல, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லையே... ஓட்டு சீட்டு காலத்தில் சொன்னது, இந்த செயற்கை நுண்ணறிவு காலத்துக்கு பொருந்து மா?