பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேச்சு: இளைஞர்களுக்கு உடல்நலம் மிக முக்கியமானது. உடல் நலம் நன்றாக இருந்தால், மனநலம் நன்றாக இருக்கும். மனநலம் நன்றாக இருந்தால், மது மற்றும் போதை பழக்கம் பக்கம் போக மாட்டார்கள். ஆண்களின் போதை பழக்கத்தால், திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்பா மற்றும் சகோதரர்களின் மது பழக்கத்தால் அவதிப்படும் பெண்கள், திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போனால், அங்கும் கணவரின் மது பழக்கத்தால் பாதிக்கப்படுவதை தான் இவங்க சுட்டிக்காட்டுறாங்க!தமிழக, பா.ஜ., விவசாய அணி தலைவர், ஜி.கே.நாகராஜ் பேச்சு: வட மாநிலத்தவர்களை, 'பானிபூரி விற்கும் வடக்கன்கள்' என, தி.மு.க.,வினர் கேலி பேசினர். 'பீஹாரில், 1 கோடி இளைஞர்களுக்கு வேலை' என, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தற்போது அறிவித்துள்ளார். தமிழகத்தின் மனித வளம், மது பழக்கத்தால் குறைந்துள்ள நிலையில், வட மாநிலங்களை சேர்ந்தவர்களை நம்பியே, தமிழகத்தில் தொழிற்சாலைகள், உணவகங்கள், விவசாயம் போன்ற தொழில்கள் நடக்கின்றன. வாஸ்தவம் தான்... வட மாநிலத்தவர்கள் எல்லாம், அவங்க ஊர்களுக்கு கிளம்பி போயிட்டா, தமிழகத்தின் தொழில் வளம் அதல பாதாளத்துக்கு போயிடுமே! அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காலத்தில், மற்றவர்கள் எல்லாம் பாதுகாப்பாக வீட்டில் இருந்த போது, அரசு மருத்துவர்கள் போர்க்களத்தில் நின்று பணியாற்றுவதை போல, பணி செய்ததை யாருமே எளிதில் மறக்க முடியாது. அப்போது, 8 கோடி தமிழக மக்களை காப்பாற்ற கடுந்தவம் செய்தது, 19,000 அரசு மருத்துவர்கள் தான். அப்படிப்பட்ட அரசு மருத்துவர்களின், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி, தி.மு.க., அரசு கைமாறு செய்திருக்க வேண்டும்; ஆனால், இன்று வரை செய்யவில்லை. வர்ற சட்டசபை தேர்தலில், அதற்கான கைமாறை நீங்க பண்ணிடுங்க... அவ்வளவு தான்!தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: நாடு முழுதும், கடந்த, செப்., 22 முதல், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அமலுக்கு வந்தது. இதன்படி நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீத மாகவும், ஐஸ்கிரீம் வகைகள் மீதான, 18 சதவீத வரி, 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பால் பொருட்களின் விலையை, ஆவின் நிறுவனம் குறைக்கவில்லை. தி.மு.க., அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் வரிச்சலுகைகள், தமிழக மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்ற தி.மு.க., அரசின் பழிவாங்கும் அரசியல் இதில் நல்லாவே தெரியுது!