பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அறிக்கை: சேலம் மாவட்டம், கெங்கவல்லி கூட்டுப்பாதையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையிலான அம்பேத்கரின் சிலையை நிறுவ, அந்த பகுதி மக்கள் முயன்றனர். அதற்கு சிலர், ஜாதிய சிந்தனையோடு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலையை சுற்றிலும் தகரங்கள் அடித்து மூடப்பட்டது. தற்போது, இதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கிறது. சிலைகளை வைத்து அரசியல் செய்யும் நிலை, எந்த ஆட்சி வந்தாலும் மாறாது போலிருக்கு!அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'கடந்த ஆட்சி போல இல்லாமல், அரசு மருத்துவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்' என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அப்படியே, கடந்த தி.மு.க., ஆட்சியில் அளித்த ஊதிய உயர்வு வாக்குறுதியை கடைசி வரை நிறைவேற்றாத நிலையில், தற்போது நிறைவேற்ற அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசுக்கு வச்ச அதே கோரிக்கை பட்டியலை, தேதியை மட்டும் மாற்றி மறுபடியும் வெளியிடுறாரோ? பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: கோவை அருகே கேரள மாநில எல்லையில், விவசாய பயன்பாட்டிற்கான, 2,000 மூட்டைகள் யூரியா உரம் பதுக்கப்பட்டு, தொழிற்சாலை அமைத்து திரவப்பொருளாக மாற்றி, கேரள தொழிற்சாலைக்கு அனுப்புவதை உள்ளூர் விவசாயிகள் கண்டறிந்து, காவல் துறைக்கு தெரிவித்துள்ளனர். இதில் அதிகளவு யூரியா மூட்டைகள், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டாட்சியில் இருப்பதால், காவிரி பிரச்னையை போல், இந்த நடவடிக்கையிலும் தொய்வு காட்டாமல் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். கேரளாவிலும் காங்., ஆட்சி தான் நடக்குது என்பதை இவர் கவனிக்கலையா? தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேட்டி: மாற்றுத்திறனாளி சசிதரன், என்ன காரணம் என்றே தெரியாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்; பின், 'இறந்து விட்டார்' என, போலீசார் கூறியுள்ளனர். அவரது மனைவி படித்துள்ளார். அவரது கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை தர வேண்டும். அரசு சார்பில் அமைச்சர், முதல் வர் வாய் திறந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல வில்லை என்பது, நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் திருபுவனம் கோவில் காவலாளி அஜித், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே!