பேச்சு, பேட்டி, அறிக்கை
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு:சேலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவரது சொந்த தொகுதியிலேயே சூழ்ச்சி செய்து தான் வெற்றி பெற்றார். ஆனால், 'தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்' என மார்தட்டிக் கொள்கிறார். சூழ்ச்சியும், துரோகமும் நிறைந்தது தான் பழனிசாமியின் அரசியல் பயணம். இடைப்பாடி தொகுதியில், த.வெ.க., வேட்பாளரை போட்டியில் இருந்து விலகச் செய்து, பழனிசாமி வெற்றி பெற்றதை, இவர் இன்னும் மறக்கலை போலிருக்கு!மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் கொள்ளு பேரனும், காமராஜர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிறுவனருமான காமராஜ் அறிக்கை: மாணவர்கள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 1956ல் தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்துடன், மதிய உணவு திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். அத்திட்டம், பின்னாளில் வந்த அரசுகளால் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. காமராஜரின் கல்வி சிந்தனையை போற்றும் விதமாக, அவரது பெயரை காலை உணவு திட்டத்திற்கு சூட்டிய முதல்வர் விஜய்க்கு கோடான கோடி நன்றிகள். காமராஜரின் புகழை வெறும் வாயால் மட்டுமே பாடிக் கொண்டிருந்த திராவிட கட்சித் தலைவர்களை விட, பேசாமலேயே அவருக்கு புகழ் சேர்த்த முதல்வர் விஜய் பாராட்டுக்குரியவர் தான்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேட்டி: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார். இதை நான், 2009ம் ஆண்டு முதலே கூறி வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார்; தற்போது, வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. இப்படி, 'கதை' விட்டுட்டு இருந்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இப்ப தான் அதை நிறுத்தியிருக்காரு... இவர் எப்ப நிறுத்துவாரோ? த.வெ.க., பரப்புரை செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமிட்ட வைகோ, இன்று விஜய் காலடியில் விழுந்து கிடக்கிறார். பா.ஜ.,வுடன் த.மா.கா., கைகோர்த்து அழிந்து விட்டது. விஜயகாந்த் துவங்கிய தே.மு.தி.க.,வை, தி.மு.க.,விற்கு ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளார் பிரேமலதா. 'ஆறு மாதங்களில் த.வெ.க., ஆட்சி முடிவிற்கு வந்துவிடும்' என, ஸ்டாலின் பேசுகிறார். அடுத்த ஏழு தலைமுறைக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வராது. அடுத்த ஏழு தலைமுறைக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வராம போனாலும், ஏழாவது தலைமுறையிலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசு தான், அந்த கட்சியின் தலைமை பதவியில் இருப்பார்!