உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  பாதி இந்தியாவை நடந்தே கடந்தேன்!

 பாதி இந்தியாவை நடந்தே கடந்தேன்!

நாடு முழுதையும் நடந்தே சுற்றி வரும், மதுரை மாவட்டம், புலிமலைப்பட்டியைச் சேர்ந்த முத்தரசு: என் 13வது வயதில் அப்பா இறந்து விட்டார். அண்ணன் தான், எனக்கு எல்லாமே. எங்கள் ஊரை சுற்றிலும் மலைகள் தான் இருக்கின்றன. பெரும்பாலும் என் பொழுது, மலைகளில் தான் கழியும். மலைகளில் நான் இருக்கும்போது, மனதில் எந்த பாரமும் இல்லாமல், இயற்கையோடு கலந்த மாதிரி இருக்கும். பொறியியல் படிப்பு முடித்து சில இடங்களில் வேலை பார்த்தேன். அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்தது. மீண்டும் ஊருக்கே வந்து, மலையிலேயே பொழுதை கழித்தேன். ஒரு கட்டத்தில், உள்ளூர் மலைகள் சலிப்பாக, கேரளாவில் உள்ள மலைகளில் நடைபயணம் செல்ல ஆரம்பித்தேன். அப்போது, சிலர் நண்பர்களாகினர். அவர்கள் வாயிலாக, இறப்பதற்குள் எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதுகுறித்து இணையத்தில் தேடி பார்த்ததில், 60 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிந்தது. என் கல்லுாரி நண்பர் ஒருவர், மலேஷியாவில் சிக்கன் மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார். அங்கு சென்று மாதம், 80,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்தேன். உடல்நிலை ஒத்துழைக்காததால், மூன்று ஆண்டுகளில் திரும்பி விட்டேன். சம்பாதித்த பணமெல்லாம் சில நாட்களிலேயே செலவாகி விட்டது. கையில் இருந்த பணத்தில், ஒரு மொபைல் போன் வாங்கினேன். மீதமிருந்த 12,000 ரூபாயுடன், மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன். அங்கு, கேரளா செல்லும் பஸ் நின்றது. அதில் ஏறி, இடுக்கி சென்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். நடைபயணம் ஆரம்பித்த நாட்களில் இருந்து, சமூக வலைதளங்களில் காணொளிகளை பதிவிட ஆரம்பித்தேன். கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, கிட்டத்தட்ட பாதி இந்தியாவை நடந்தே கடந்தேன். நான் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து பலரும் பணம் அனுப்பினர். கிடைத்த இடங்களில் சாப்பிட்டேன்; பசி என்று எங்கும் நின்றதில்லை. தினமும் 25 கி.மீ., நடப்பேன். சூரியன் மறையும் நேரத்தில் எங்காவது தங்கி விடுவேன். மொத்தம் 10,000 கி.மீ., பயணம் செய்துள்ளேன். நம் மனதில் இருக்கும் தயக்கத்தையும், அச்சத்தையும் பயணம் போக்கிவிடும். மனிதர்களை தடையில்லாமல் அணுக முடியும். எனக்கு ஹிந்தியோ, ஆங்கிலமோ தெரியாது. ஆனாலும், எனக்கு பல நண்பர்கள் உதவினர். என் பெருங்கனவு, எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பது தான். இரண்டு மாத ஓய்வுக்கு பின், அதற்கான முயற்சியில் இறங்குவேன். அதற்கு, 60 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்பதால், அதற்கான உதவியை அரசு செய்தால் நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை