உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வீணை கற்பது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்!

வீணை கற்பது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்!

மதுரையைச் சேர்ந்த, பிரபல வீணை இசை கலைஞர் மல்லிகா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் விஜயதசமி அன்று, 108 இசைக் கலைஞர்களை ஒன்று சேர்த்து, வீணை வழிபாட்டை நடத்தி வருகிறோம். கடந்த 2001 முதல் இந்நிகழ்வு தொடர்ந்து நடப்பது கலைவாணியின் அருள்.நாங்கள், காரைக்குடி வீணை இசைப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். எனக்கு 7 வயதாகும் போதே வீணை கற்க அனுப்பி வைத்தனர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், கங்கையில் புனித நீராடி விட்டு மனதில் என்ன நினைக்கிறாரோ, அது கிடைக்கப்பெறும் வரத்தை பெற்றவர். அவர் வீணையை நினைக்க, கங்கையில் இருந்து அவருக்கு வீணை கிடைத்தது.காசியில் உள்ள அனுமன்காட் என்ற இடத்தில், 'முத்துசுவாமி தீட்சிதர் தினம்' நடைபெற்றபோது, என் 17வது வயதில் வீணை இசைக்கும் பாக்கியம் கிடைத்தது. அதேபோல், காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் காரைக்குடியில் தங்கியிருந்த சமயத்திலும், வேறு சில நிகழ்வுகளிலும் அவர் முன் வீணை இசைத்திருக்கிறேன்.சமீபத்தில், 'மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம்' அமைப்பு சார்பில், ஸ்ரீகாஞ்சி மகா பெரியவரின் பெயராலேயே ஒரு விருதும் வாங்கினேன்.இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன். என் மாணவர்கள் பலரும் குருவாக இருந்து, பிறருக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். என் வழிகாட்டுதலில், ஒன்பது மாணவர்கள் இசை குறித்த பிஎச்.டி., முடித்து முனைவர் ஆகியுள்ளனர்.ஸ்ரீரவிசங்கர்ஜி, தேசிய அளவில் 3,800 இசைக் கலைஞர்கள் பங்கேற்ற பெரிய இசை நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தினார். அதில் என் ஒருங்கிணைப்பில், 150 கலைஞர்கள் பங்கேற்றோம். சிறப்பு விருந்தினராக அப்துல் கலாம் பங்கேற்றிருந்தார். மேலும், ஜவஹர்லால் நேரு விருது, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற விருது என மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானம் விருதை யும் வாங்கியுள்ளேன்.இன்ஜினியர், டாக்டர், ஆடிட்டர், ஆசிரியர், வழக்கறிஞர் என பலரும், ஆர்வமுடன் என்னிடம் வீணை கற்றுக் கொள்கின்றனர். ஆண் - பெண் பேதமின்றி, 7 முதல் 80 வயது வரை கற்க வருகின்றனர். இதுவொரு ராஜ கலை; அறிவை துாண்டும் கலை.ஆர்வம் மட்டுமல்லாமல், சரஸ்வதியின் அனுக்கிரகம் இருப்பவர்களுக்கு இந்த கலை கைகூடும். பத்மாசனத்தில் அமர்ந்து கை விரல்களால் மீட்டும்போது, வலது மூளைக்கு செல்லும் நரம்புகள் துாண்டப்பட்டு, புத்திக் கூர்மை உண்டாகும். வீணை கற்பது, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை