திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள, கொடை மலைப்பூண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் சிவானந்தம்: இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களும், இந்த மலைப்பூண்டை விரும்புவதற்கு காரணம், ஓராண்டு வரை கூட இதை வைத்திருந்து பயன்படுத்தலாம்; கெட்டுப் போகாது. இதில், காரத்தன்மை கூடுதலாக இருக்கும். நாங்கள் விளைவித்த மலைப்பூண்டுகளை, விலை குறைத்து, தேனி மாவட்டம், வடுகபட்டி சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். ஆனால், விவசாயிகளின் உழைப்புக்கும், முதலீட்டுக்கும் எந்த லாபமும் கிடைக்கவில்லை. அதற்கு தீர்வு காணவே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை, 2023ல் துவக்கினோம். மலைப்பூண்டு விவசாயிகளை நேரில் சந்தித்து, நிறுவனத்தில் உறுப்பினராகி, மலைப்பூண்டு விற்பனை செய்தால், என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று விரிவாக எடுத்துச் சொன்னோம்; பலரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். மொத்தம், 700 விவசாயிகள் இணைந்தனர். ஆளுக்கு, 1,000 ரூபாய் என பங்கு தொகை போட்டோம்; 7 லட்சம் ரூபாய் சேர்ந்தது. விவசாயிகளிடம் இருந்து மலைப் பூண்டுகளை கொள்முதல் செய்தோம். 'கொடை ஹில் கார்லிக்' என்ற பெயரில் இணைய தளம் துவக்கினோம். இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்களும் எங்களை தொடர்பு கொண்டு வாங்குகின்றனர். இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் தலையீடு இல்லாமல், நேரடி விற்பனை செய்கிறோம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நடைமுறை செலவுகளுக்காக, கிலோவுக்கு, 10 ரூபாய் மட்டும் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூல் செய்கிறோம். பூண்டின் தரத்தை பொறுத்து, விவசாயிகளுக்கு கிலோவுக்கு குறைந்தபட்சம், 200 முதல் அதிகபட்சம், 300 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. சில்லரை வியாபாரிகள் பலரும் எங்களிடம் மலைப்பூண்டு வாங்கி, விற்பனை செய்ய தயாராக இருக்கின்றனர். ஆனால், வியாபாரிகளிடம் விற்பனை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காரணம், தரம் குறைவான பூண்டுகளை கலந்து, மக்களை ஏமாற்றக்கூடிய முயற்சிகள் நடக்கும். அதனால், மலைப்பூண்டின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவும், வியாபாரிகள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். எங்களின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும், இணையதளமும் மக்களிடம் நன்கு பிரபலமடைந்து விட்டால், அடுத் தடுத்த ஆண்டுகளில் விற்பனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபட்டுள்ளோம். தொடர்புக்கு: 89400 30306.