புதுடில்லி : ஹரியானாவில், சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில், காங்., - எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வார் உள்ளிட்டோரின், 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.ஹரியானாவின் யமுனா நகர், சோனிபட் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை மீறி, சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.இது தொடர்பாக, இந்திய தேசிய லோக்தள கட்சியைச் சேர்ந்தவரும், யமுனா நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தில்பக் சிங் மற்றும் அவரது உதவியாளர் குல்விந்தர் சிங்கை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.மேலும், சோனிபட் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வாரையும், கடந்த ஜூலை இறுதியில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில், காங்., - எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வார், முன்னாள் எம்.எல்.ஏ., தில்பக் சிங், குல்விந்தர் சிங் உள்ளிட்டோரின், 122 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர்.மொத்தம், 145 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், 100 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள், சில வணிக மனைகள் மற்றும் கட்டடங்கள் அடங்கும்.முடக்கப்பட்ட சொத்துகள் குருகிராம், பரிதாபாத், சோனிபட், கர்னால், யமுனா நகர், சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பிற மாவட்டங்களில் உள்ளன.இவை அனைத்தும், தில்பக் சிங், சுரேந்தர் பன்வார், இந்தர்பால் சிங், மனோஜ் வாத்வா, குல்விந்தர் சிங் உள்ளிட்டோருக்கு சொந்தமானது என, அமலாக்கத் துறையினர் நேற்று தெரிவித்தனர்.