உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கட்சி பேதமின்றி கவுன்சிலர்களுக்கு கிடைத்த கவனிப்பு!

கட்சி பேதமின்றி கவுன்சிலர்களுக்கு கிடைத்த கவனிப்பு!

“தீ பாவளி பரிசுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணியிருக்காரு வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி. “தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், திருவெறும்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காருல்லா... இதோட, திருச்சி கிழக்கு, மணப்பாறைன்னு மூன்று சட்டசபை தொகுதிகள் அடங்கிய, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்காரு வே... “இந்த மூன்று தொகுதியிலும் இருக்கும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகளுக்கு மாசா மாசம் சம்பளம் மாதிரி, தலா, 2,500 ரூபாய் குடுத்துட்டு இருக்காரு... இந்த முறை, வழக்கமான பணத்துடன், தீபாவளி போனசா ஒரு மாச சம்பளம், 2,000 ரூபாய் மதிப்புள்ள மிக்சி, ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ்னு குடுத்து அசத்தியிருக்காரு வே... “கிட்டத்தட்ட, 12,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு இப்படி பரிசு குடுத்திருக்காரு... மிக்சிக்கு மட்டுமே, 2.50 கோடி ரூபாய்க்கு மேல செலவாகியிருக்காம்... இதுபோக, தீபாவளி அன்னைக்கு எல்லாருக்கும் பிரியாணி விருந்தும் குடுத்திருக்காரு... இதை கேள்விப்பட்டு, சீனியரான அமைச்சர் நேரு தரப்பே அசந்து போயிட்டு வே...” என்றார், அண்ணாச்சி. “தீபாவளி வசூல்ல பட்டையை கெளப்பிட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “திருப்பூர் மாவட்டத்துல, தாலுகா அளவிலான வருவாய் துறையினர், தங்களது பகுதியில் பட்டாசு கடை வச்சவாளிடம் கடைக்கு தலா, 10,000 ரூபாய் மற்றும் பட்டாசு பாக்ஸ்கள் வாங்கியிருக்கா... தாலுகா அதிகாரிகள், அவருக்கு துணையான அதிகாரிகள், அவா அந்தஸ்துக்கு ஏற்ப வசூலை வாரி குவிச்சிருக்கா ஓய்... “பட்டாசு கடைகள் மட்டுமல்லாம, பெரிய பனியன் கம்பெனிகள், சினிமா தியேட்டர்கள்னு கடைசி ஒரு வாரமா சூறாவளி சுற்றுப்பயணம் போய் வசூலை வாரியிருக்கா... இதுல, மாவட்டத்தை ஆட்சி செய்யும் அதிகாரிக்கு உதவியா இருக்கும் மூணு பேர், 'அதிகாரிக்கு கொடுக்கணும்'னு சொல்லியே, செமத்தியா வசூல் பண்ணியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா. “தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்த லோகு, பிரபு, மாறன் வர்றாங்க பாருங்க...” என, தெருவை பார்த்து முணுமுணுத்த அந்தோணிசாமி, “திருப்பூர் மாநகராட்சி தீபாவளி வசூல் கதையை கேளுங்க...” என்றார். “விளக்கமா சொல்லுங்க பா...” என்றார், அன்வர்பாய். “திருப்பூர் மாநகராட்சி தி.மு.க., வசம் தான் இருக்கு... மேயர், துணை மேயர் உட்பட மொத்தம், 60 கவுன்சிலர்கள் இருக்காங்க... ஆளுங்கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி, தீபாவளிக்கு அனைத்து கவுன்சிலர்களையும் நல்லாவே கவனிச்சாங்க... “இதுக்காகவே, தனியா வசூல் நடந்துச்சு... எல்லா கவுன்சிலர்களுக்கும் கட்சி பாகுபாடு இல்லாம, தலா, 3 லட்சம் ரூபாய் குடுத்திருக்காங்க... அதே நேரம், 'எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கும், எங்களுக்கும் ஒரே தொகையா குடுத்தா எப்படி'ன்னு ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் சிணுங்கியிருக்காங்க... அதை யாரும் காதுல போட்டுக்கல... “சிலர், இந்த தொகையை, தங்களது வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கட்சியினருக்கு கொஞ்சம் குடுத்திருக்காங்க... பெரும்பாலான கவுன்சிலர்கள், 3 லட்சத்தையும் மொத்தமா பதுக்கிட்டாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை