திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 15ம் தேதி நடப்பாண்டிற்கான தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேல்திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, மேல்திருத்தணி மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.