படகு பழுதானதால் 5 நாட்களாக தத்தளித்த இலங்கை மீனவர்கள்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் கடலில் படகு பழுதானதால் 5 நாட்களாக இலங்கை மீனவர்கள் தத்தளித்தனர்.பாசிபட்டினம் கடற்கரையில் இருந்து 2 நாட்டிக்கல் மைல் துாரத்தில் மர்ம படகு நின்றது. அப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று படகை மீட்டனர். அந்த படகில் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த பூலோகதாசன் 54, விமலேந்திரன் 45, இருந்தனர். போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது:இருவரும் மார்ச் 13ல் இலங்கை யாழ்பாணம் காளியம்மன் கோயிலில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு திசைமாறி தொண்டி பாசிபட்டினத்தை நோக்கி சென்றது.திடீரென்று படகு பழுதாகி எரிபொருளும் தீர்ந்துவிட்டதால் படகை செலுத்த முடியாமல் தவித்தனர். அந்த பக்கமாக படகில் சென்ற மற்ற மீனவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டனர். இரு மீனவர்களின் அலைபேசியும் சுவிட்ச் ஆப் ஆனது. இந்நிலையில் இரு மீனவர்களையும் காணவில்லை என யாழ்பாணம் போலீஸ்ஸ்டேஷனில் இருவரின் உறவினர்கள் புகார் செய்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மரைன் ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் தேவிபட்டினம் மரைன் போலீசார் இலங்கை யாழ்பாணம் போலீசாருடன் தொடர்பு கொண்டு மீட்கபட்ட மீனவர்களின் விபரங்களை தெரிவித்தனர். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.