உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வாய்ஸ் மெசேஜ் போட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!

வாய்ஸ் மெசேஜ் போட்டு மிரட்டும் ஆளுங்கட்சி புள்ளி!

பில்டர் காபியை ருசித்தபடியே, ''துணைவேந்தர் தேடல் குழுவே நியமிக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த பல்கலையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவை, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் இந்த மாசத்தோட முடியறது... பல்கலை மானிய குழு விதிப்படி, ஆறு மாசத்துக்கு முன்பே, துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவை நியமிச்சிருக்கணும் ஓய்...''கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பதவி ஏப்ரல்ல முடியறது... அதுக்கு தேடுதல் குழு போட்டவா, இதை மட்டும் கண்டுக்கல ஓய்...''ஏற்கனவே, துணைவேந்தர் நியமனங்கள்ல அரசுக்கும், கவர்னருக்கும் ஏழாம் பொருத்தம்... தேடல் குழு அமைக்காம இருப்பதால, தற்போதைய துணைவேந்தருக்கே பதவி நீட்டிப்பு கிடைக்கலாம்னு சிலர் சொல்றா ஓய்...''அதே நேரம், துணைவேந்தர் பதவி காலியானா, பொறுப்பு துணைவேந்தரை நியமிப்பா... அதுக்கு தற்போதைய பதிவாளர் காய் நகர்த்தறார்... இவர், தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் உறவுக்காரர் என்பதால, கவர்னர் சம்மதிப்பாரான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பிரசவத்துக்கு வர்றவங்களை அலைக்கழிக்கிறாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி கிராமத்தில், 27 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு... இங்க, பிரசவத்துக்கு தனிப்பிரிவும் இருக்குது பா...''சுத்தியிருக்கிற, 38 கிராம மக்கள் இங்க தான் சிகிச்சை மற்றும் பிரசவத்துக்கு வர்றாங்க... முன்னாடி, வருஷத்துக்கு, 100 பிரசவங்களுக்கு மேல் நடந்துச்சு பா...''இப்ப, மகப்பேறு சிகிச்சைக்கு தனி டாக்டர் இல்லாததால, கர்ப்பிணியரை, 22 கி.மீ., தள்ளியிருக்கிறகாரையூர் வட்டார சுகாதார நிலையத்துக்கு அனுப்பிடுறாங்க...''வட்டார மருத்துவ அலுவலர், காரையூர் மருத்துவமனையில் பிரசவங்கள் எண்ணிக்கையை அதிகமா காட்டுறதுக்காக, மேலைச்சிவபுரி பணியாளர்களை அங்க அனுப்பி அலைக்கழிக்கிறார்னும் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அருண்மொழி இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''என்கிட்டயும் ஆஸ்பத்திரி மேட்டர் ஒண்ணு இருக்குல்லா...'' என்றபடியே தொடர்ந்தார்...''திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நிறைய ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்க்காவ... அவங்களது மேனேஜரிடம் ஆளுங்கட்சி புள்ளி ஒருத்தர் போய், 'நான் சொல்றவங்களை தான் ஒப்பந்த ஊழியர்களா சேர்த்துக்கணும்'னு மிரட்டியிருக்காரு வே...''மேனேஜர் மறுக்கவே, 'எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆபீஸ்ல இருந்து என்னை இங்க வெச்சிருக்காங்க... ஒரு போன் போட்டா, உங்க ஒப்பந்தம் கேன்சலாகிடும்'னு சொல்லியிருக்காரு வே...''நொந்து போன மேனேஜர், 'திருப்பூர்ல என்னால வேலையே பார்க்க முடியல... தினமும் பணம் கேட்டு ஆளுங்கட்சி புள்ளி மிரட்டுறாரு... நான் போனை எடுக்கலன்னாலும், 'என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது'ன்னு வாய்ஸ் மெசேஜ் போட்டு வம்பு பண்றாரு'ன்னு, தன் நிறுவன அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்காரு வே...''ஆளுங்கட்சி புள்ளியோ, 'ஜி.எச்., கேன்டீன் ஒப்பந்தம் எடுக்க பல லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன்... அதை எப்படி எடுக்கிறதாம்'னு எதிர் கேள்வி கேட்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''சுகுமார் வராரு... இஞ்சி டீ குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 22, 2025 10:42

எல்லாப். பதவிகளுக்கும் 'கொடுத்து' தான் அமர வேண்டிய கட்டாயம் கொடுத்தவன் அதை 'வசூலித்துத்தானே ' ஆக வேண்டும் இந்த விஷ வட்டம் முடிவில்லாதது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை