அதிமேதாவி அங்குராசு!
வெப்ப மயக்கம்!வெயில் அதிகரிக்கும் நேரத்தில் பகல் பயணங்களின் போது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் மயக்கம் மற்றும் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவருக்கு, உடனடியாக, முதலுதவி தர வேண்டும். அப்போது தான், உயிரைக் காப்பாற்ற முடியும்.முதலுதவி விவரம்:வெயிலால் பாதிக்கப்பட்டவரை, நல்ல நிழல் உள்ள இடத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அணிந்திருக்கும் ஆடைகளை தளர்த்தி, உடல் முழுவதும் காற்று படும்படிச் செய்யுங்கள். சுற்றி கூட்டம் சேருவதைத் தவிருங்கள்.கால்களுக்கு அடியில் தலையணைகள் கொடுத்து, உடலின் கீழ்பாகத்தை உயர்த்துங்கள். தலைக்கு தலையணை தேவையில்லை; தலைப்பாகம் தாழ்வாக இருப்பது தான் நல்லது. அடுத்து, தண்ணீரில் நனைத்த பருத்தி துணியால், உடல் முழுவதையும் நன்கு துடையுங்கள். சுய நினைவுடன் இருந்தால், திரவ உணவு குடிக்க கொடுங்கள். காபி, டீ போன்ற சூடான பானங்கள் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் உடல் வெப்பம் இன்னும் அதிகரித்து, வியர்த்து, வெப்ப பாதிப்பு அதிகமாக வாய்ப்பு ஏற்படும். குளிர்ந்த நீர், இளநீர், எலுமிச்சைச் சாறு, உப்பு போட்ட மோர், பழச்சாறு போன்றவற்றை குடிக்க கொடுக்கலாம். மயக்கம் தெளியவில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!பளிச் குறிப்பு!* மாங்கொட்டையை, வெது வெதுப்பான நீரில், 10 நிமிடம் ஊற வைத்து, அந்த நீரில் செம்பு, பித்தளை போன்ற உலோக பாத்திரங்களை துலக்கினால், 'பளிச்' என மினு மினுக்கும்!* எலுமிச்சம்பழத்தை, இரண்டாக வெட்டி, கத்தி, அரிவாள்மனையில் தடவினால், துரு காணாமல் போய் விடும்* பெரிய வெங்காயக் குவியலுக்குள், விளைந்த மாங்காயை வைத்தால், நான்கே நாட்களில் சீராக பழுத்து விடும்* கற்பூரத்துடன், சிறிது மிளகையும், அரிசியையும் போட்டு வைத்தால், காற்றில் கரைந்து போகாது* எந்தவகை சூப்பிலும், அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால் சுவை கூடும்* சேனை, சேம்பு போன்ற கிழங்கு வகைகளை எண்ணெய் விட்டு வதக்கி, கறி செய்யும் போது, சிறிதளவு கடலை மாவை துாவினால் மொறுமொறுப்பாக இருக்கும்* ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ள, பல் வலி தீரும்* மருதாணி இலையுடன், மஞ்சளை சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு மீது பற்றுப்போட்டு வர, சில நாட்களில் குணமாகும்.எளிய செயல்கள்!* கொய்யாப் பழம், தமிழகம் முழுவதும் விளைகிறது; எளிதாக கிடைக்கும்; தினமும், ஒன்று வீதம், நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, வாய்ப்புண் குணமாகும்.* ஈரத் துணியில் சுற்றி வைத்தால், வாழைப்பழம் புத்தம் புதியதாக இருக்கும்.* நெஞ்சில் தங்கும் சளியை கரைக்க, கொள்ளு சூப் அருமையான மருந்து. குழந்தை முதல், முதியவர் வரை அருந்தலாம்; குளிர் காலத்தில், சளித் தொல்லையை தவிர்க்க தாராளமாக குடிக்கலாம்.* மிக்சியில், அரைக்கும் பகுதியில், பிளேடை கூர்மையாக்க, 'ஜாரை' ஈரம் போக துடைத்து, உலர்ந்த முட்டை ஓடுகளைப் போட்டு, இரண்டு சுற்று சுற்றினால் போதும்; கல் உப்பு ஒரு கைப்பிடி போட்டு சுற்றினாலும், பிளேடு கூர்மையாகி விடும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு!