உள்ளூர் செய்திகள்

தோழா... தோழா...

ஜனகராஜபுரம் என்னும் நாட்டை ஜனகராஜ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனும் ஓர் மன்னன் தான். அவன் பெயர் கேகயன். அவன் கேகயபுரம் என்னும் நாட்டை ஆண்டு வந்தான்.ஜனகராஜ் மிகவும் கோபக்காரன்; கேகயன் மிகவும் பொறுமைசாலி; இருவரும் வல்லமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். என்றாலும் அவர்கள் நண்பர் களாக இருந்ததே பெரிய விஷயம்.ஜனகராஜபுரத்தை விட்டு ஐநூறு கல் தள்ளி இருந்தது கேகயபுரம். ஜனகராஜுக்கு என்ன காரணத்தினாலோ, புதுப்புது நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படியே அவன் அடிக்கடி போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.உலகம் சமாதானத்துக்காக ஏங்கிக் கொண்டு கிடக்கும் போது, எங்கு பார்த்தாலும் ரத்த ஆறுகளும், அங்கம் இழந்த மனித உடல்களும் கோரத் தாண்டவம் புரிந்தன. இதை எல்லாம் கேள்விப்பட்ட கேகயன் போரை வெறுத்தான்.ஜாடை, மாடையாக ஜனகராஜுக்கு எடுத்துச் சொன்னான். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. ஒரு சமயம் முக்கியமான விஷயத்தை கலந்தாலோசிக்க கேகயன் ஜனகராஜ் நாட்டுக்குப் போக இருந்தான். ஆனால், ஜனகராஜனோ அவ்வேளையில், ஆயிரம் கல் தள்ளி இருந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுத்துக் கொண்டிருந்தான். ஆகவே, வருத்தமடைந் தான் கேகயன்.தன் வருத்தங்களைக் கடிதமாக எழுதி, 'எவ்வளவு மண்ணை நாம் வெற்றி கொண்டாலும் நம் உடல் ஆறடிக்குள் தான். ஆகவே, தயது செய்து சில காலத்துக்கு யுத்தம் வேண்டாம் என்ற முடிவெடு!' என்று எழுதித் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினான்.தூதுவன் ஜனகராஜபுரம் சேர்ந்த போது, மன்னன் போர் முடிந்து இன்னும் வரவில்லை என்று அறிந்து கொண்டான். எனவே, அரண்மனை விருந்தினராக அவன் தங்க வேண்டியவனானான்.இரண்டொரு நாட்கள் சென்றன. மன்னன் திரும்பி வந்தான். ஓலையைச் சேர்ப்பித்தான் தூதன். ஓலையில் எழுதப்பட்ட விஷயங்கள் மனக் கொதிப்பைத் தூண்டி விட்டன.'நாடு வெறி பிடித்து அலையக்கூடிய ஜனகராஜுக்கு, அமைதியை விரும்பும் கேகயன் எழுதுவது, ரத்த வெறி பிடித்தவனே, மிருகங்களைப் போல் தன் இனத்தையே எத்தனைக் காலம் அழிக்கப் போகிறாய். கொடியவனே, உன்னிடம் நட்பு கொண்டதைப் பாவமாக எண்ணுகிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.ஜனகராஜன் எதையும் வெளிக்காட்ட வில்லை. காட்ட சாட்டமாக அதற்குப் பதிலை எழுதித் தூதுவன் கையில் அனுப்பி வைத்தான். பிரித்துப் படித்த கேகயன் திடுக்கிட்டுப் போனான்.அவ்வளவு கீழ்த்தரமாக அவனை விமர்சித்திருந்தான் ஜனகராஜ். சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் மிகப்பெரிய அறிவாளியாக இருந்ததால் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துப் பார்த்தான்.தான் எழுதப்பட்ட ஓலை அரண்மனையில் மாற்றப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் ஜனகராஜ் இவ்வளவு ஆவேசமாகப் பதில் கடிதம் எழுதி இருக்கிறான். தீர்மானமான யோசனைக்குப் பிறகு கேகயன் ஒரு ஓலையை எழுதினான். அவனே மாறுவேடம் பூண்டு ஜனகராஜபுரத்துக்கு ஓலையுடன் சென்றான். கேகய தேசத்திலிருந்து மீண்டும் ஓலை என்றவுடன் அலட்சியமாக அதை வாங்கிப் பிரித்துப் படித்தான்.'நண்பா, உன் தேசத்திலேயே உனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்பதை உன் ஓலை மூலம் நான் அறிந்து கொண்டேன். வந்த இடத்தில் நான் எழுதிய ஓலை மாற்றப்பட்டு, உன் கையில் வேறு ஓலை தரப்பட்டிருக்கிறது.''நான் எழுதிய ஓலையில் காணப்படும் விஷயம் இதுதான். எவ்வளவு மண்ணை நாம் வெற்றிக் கொண்டாலும், நம் உடல் ஆறடிக்குத் தான். ஆகவே, தயவு செய்து சில காலத்துக்கு யுத்தம் வேண்டாம் என்று முடிவெடு.இந்த ஓலையில் உள்ள கையெழுத்து தான் என் உண்மையான கையெழுத்து. அந்த ஓலையில் உள்ள கையெழுத்துடன் இதை ஒப்பிட்டுப் பார். உன் அரண்மனையில் வளர்ந்து விட்ட உனக்கு எதிரிகளென்கின்ற புல்லுருவிகளைக் களைந்தெறி.அன்புடன் கேகயன்.ஜனகராஜ் சிந்தனையில் ஆழ்ந்தான். தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணினான். பின்னர் வந்த தூதனைக் கவுர வித்து தங்க வைத்து விட்டு, தன் உண்மையான நலம் விரும்பிகளிடம் உண்மையைக் கண்டறிய உத்தரவிட்டான்.பழைய ஓலை கொண்டு வந்து பரிசீலிக்கப் பட்டது. அரசனுக்கு மற்றவர்கள் எழுதிய ஓலைகளும் பரிசீலிக்கப்பட்டன. முக்கிய மந்திரி நாகநாதனின் கையெழுத்தும், கேகயன் பெயரில் எழுதப்பட்ட ஓலையும் ஒத்திருந்தன.கேகயனின் மிகப் பழைய கையெழுத்துக்களும், புதிய ஓலை கையெழுத்தும் பரிசீலிக்கப்பட்டன. இவை ஒத்திருந்தன. மன்னனுக்கு உண்மை விளங்கியது.நாகநாதன் அழைத்து வரப்பட்டான். அவனிடம் மிரட்டிக்கேட்ட போது, அவன் தான் எழுதியதாக ஒப்புக் கொண்டான். மன்னன் வெளியில் உள்ள நாடுகளைப் பிடிக்க எண்ணினான். மந்திரி உள்நாட்டையே பிடிக்கத் திட்டமிட்டான் என்று புரிந்தது.ராஜ துரோகக் குற்றத்துக்காக அவனுக்கும், அவன் கூட வேலை செய்தவர்களுக்கும் மரண தண்டனை தரப்பட்டது. சரியான சமயத்தில் தன்னைக் காப்பாற்றி, உண்மையை உணர வைத்த கேகயனைப் பார்க்கத் துடித்தான்.கேகயன் மாறு வேடத்தைக் கலைத்தான். ஜனகராஜ் அகமகிழ்ந்து போனான். இருவரும் தழுவிக் கொண்டனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !