உள்ளூர் செய்திகள்

அஸ்திவாரத்தில் தங்கச் செங்கல்!

தங்கக் கட்டிகளை அஸ்திவாரமாகப் போட்டு ஒரு கோட்டையை எழுப்பினார் ஒரு மன்னர். அவர் ஒரு இந்திய மன்னர். அந்தக் கோட்டை இன்றும் உள்ளது. அது எது தெரியுமா? பூனா நகரின் அருகிலுள்ள புரந்தர் என்னும் கோட்டை. இதைக் கட்டியவர் பேடார் ராஜா. 1290-ல் இங்கு கோட்டை எழுப்பத் திட்டமிட்ட போது, கட்டடக்கலை வல்லுநர்கள், அது சதுப்பு நிலம் அங்கு கட்டடம் எழுப்பினால், இடிந்து விழும் என்றனர். கவலையோடு அரசர் தூங்கப் போனார். கனவில் ஒரு கட்டளை பிறந்தது. கோட்டை எழுப்பும் அஸ்திவாரத்தில் தங்கக் கட்டிகளைப் போட்டு கட்டடம் எழுப்புமாறு.கனவின் கட்டளைப்படி அந்தச் சதுப்பு நிலத்தில் 12 அடி ஆழத்துக்கு, 35 அடி சதுரத்துக்கு இரண்டு கடைகால் (குழி) தோண்டினார். கஜானாவைத் திறந்து விட்டார். அதிலிருந்து தங்கம் வெளிக் கொண்டுவரப்பட்டன. 50 ஆயிரம் தங்கக் (செங்கல்) கற்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கல்லும் 4340 கிராம் எடை. மொத்தத் தங்கத்தின் எடை 37 ஆயிரத்து 500 பவுண்டுகள். இன்றைய மதிப்பு 120 மில்லியன் டாலர்கள். இவ்வளவு மதிப்புள்ள தங்கத்தை மண்ணில் கொட்டி கோட்டையின் ஆசார வாசலுக்கான அஸ்திவாரம் எழுப்பப்பட்டது. கோட்டையும் எழுந்தது. இதன் சுவரில் இது எழுப்பப்பட்ட தகவல்களைக் குறிக்கும் செப்புப்பட்டயம் பதிக்கப் பட்டுள்ளது.இக்கோட்டையின் கீழுள்ள தங்கத்தை வெளிக்கொண்டு வர பிரிட்டிஷ் ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அரசு அனுமதியும் வழங்கியது. ஆனால், கோட்டையின் அருகிலுள்ள மகாதேவர் ஆலயப் பூசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இம்முயற்சி அழிவிற்கு வழிகோலும் என்று வாதாடினர். ஆகவே, கைவிடப்பட்டது. பல கோடி மதிப்புள்ள தங்கம், புரந்தர் கோட்டை நுழைவாயிலின் அடியில் இன்றும் புதைந்து கிடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !