உள்ளூர் செய்திகள்

டெடி பேர்... டெடி பேர்...

ஒரு காட்டில் வசித்து வந்த கரடி, அடிக்கடி தன் உடலை பார்த்து வெறுப்படைந்தது.இதைக் கவனித்த மான், “கரடியே! எதற்காக உன் உடலையே பார்த்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது.“என் உடலை நன்றாக உற்றுப் பார். ஏராளமான முடிகள். இந்த முடிகளை பார்க்கிற போது, எனக்கு வெறுப்பு தான் ஏற்படுகிறது. என் உடலை விட்டு இந்த முடிகள் எல்லாம் தொலைந்து போனால் தான், நான் நிம்மதியாவேன். இதுக்கு ஒரு யோசனை கூறு,” என்றது கரடி.“கரடியே! இந்த முடிகள் தான் உனக்கு அழகே. புசு புசுன்னு பஞ்சு மாதிரி இருக்க... உன்னை மாதிரியே பொம்மைகள் செய்து மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். அந்த குட்டீஸ்சும், உன் பொம்மையை கட்டிப் பிடித்து கொஞ்சுவதை பாத்திருக்கேன். ''அதை போய் வேணாம்னு சொல்றியே... இத்தகைய அழகான முடிகள் உன் உடலில் இருப்பதால் தான், நீயும் பார்ப்பதற்கு அழகா இருக்கிறாய்... இந்த முடிகள் மட்டும் உன்னுடைய உடலில் இல்லைன்னா நீ அழகாகவே இருக்க மாட்ட,” என்றது மான்.“என்ன சொல்ற... நீயே இப்படிக் கூறலாமா... நான் என் உடல் முடிகளைப் பார்த்து வெறுப்படைகிறேன். நீயோ அதைப் பாராட்டுகிறாயே... உன் உடம்பு எப்படி மழமழன்னு இருக்கு... உனக்கு என்ன கஷ்டம். தயவு செய்து என் மன நிலையைப் புரிந்து, அதைப் போக்கிட ஒரு வழி சொல்,” என்றது கரடி.“எனக்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன். உனக்கு உன் முடிகள் தான் அழகு. இதை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டேயிருப்பேன்!” என்றது மான்.“சரி மானே! நீ இங்கிருந்து செல்லலாம்! இவ்வளவு நேரமாக நான் உன்னோடு பேசியது வீண் என்று நினைக்கிறேன்,” என்று மானை விரட்டியது கரடி.அமைதியாக அந்த இடத்தை விட்டுச் சென்றது மான்.அங்கிருந்து புறப்பட்ட கரடி, வழியில் ஒரு நரியை சந்தித்து, தன் எண்ணத்தை தெரியப்படுத்தியது.அந்தக் கரடியும், நரியும் சில நாட்களுக்கு முன் பேசாமல் இருந்தன. எனவே, கரடியை எப்படியாவது அவமானப்படுத்திட வேண்டும் என்று மனதில் திட்டமிட்டிருந்த நரிக்கு, இது ஒரு சரியான சந்தர்ப்பமாக தோன்றியது.“கரடியே! உன் உடலில் உள்ள முடிகளுக்கு நெருப்பை வைத்துவிடு. நெருப்பில் முடிகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். அதன் பின் நீ அழகாக காட்சியளிப்பாய்,” என்றது நரி.உடனே, தன் உடலில் நெருப்பை வைக்க முயற்சித்தது கரடி. அந்நேரம் அந்தப் பக்கமாக வந்த மான், கரடியின் செயலைக் கண்டு திடுக்கிட்டது. உடனே அதை தடுத்து, “கரடியே உன் முடிக்கு நெருப்பு வைத்தால், நீயும் சேர்ந்து எரிந்து விடுவாய். ஏற்கனவே, அந்த நரிக்கும், உனக்கும் சண்டை ஏற்பட்டதை நானறிவேன். அது வஞ்சம் தீர்க்க, இந்த யோசனையை கூறியுள்ளது. என் போன்ற நல்லவர் அறிவுரையால் உனக்கு துன்பம் ஏற்படாது,” என்றது.உண்மையை உணர்ந்த கரடி, “சாரி.. மை டியர் பிரெண்ட்... நீ சொல்வது போல் மனித குழந்தைகள் என் பொம்மையை வைத்து கொஞ்சி விளையாடுவதையும், 'டெடி பேர்.. டெடி பேர்...' என பாட்டுப் பாடி ரசிப்பதையும் பார்த்திருக்கிறேன். இனிமேல், இப்படிப் பட்ட முட்டாள்தனம் செய்ய மாட்டேன்... தேங்க்யு நண்பா!'' என்றது.என்ன பட்டூஸ்... என்னோட சுருள் முடி பிடிக்கல... அவள மாதிரி, 'ஸ்டிரெயிட் ஹேர்' வேணும்... இப்படித்தான் நமக்கு இல்லாததை பார்த்து ஆசை படுறோம். இது தவறு... நமக்கு, சாமி, எதை கொடுத்திருக்கிறாரோ அதை நினைத்து சந்தோஷப்படுங்க...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !