கூடுதல் வருவாய் தரும் இளஞ்சிவப்பு நெல்லிக்காய்
இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காய் சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு நெல்லிக்காய் செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே, 15 அடி இடைவெளி இருந்தால் போதும். ஒவ்வொரு பள்ளமும், 2 அடி அகலம், 2 அடி உயரம் இருக்க வேண்டும்.இந்த பள்ளத்தில், தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் கலவை உள்ளிட்டவை அடியுரமாக போட்டு நட வேண்டும்.இதுபோல செய்தால், கோடை காலத்திலும் வறட்சியை தாங்கி நெல்லிக்காய் மகசூல் கொடுக்கும்.குறிப்பாக, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், நெல்லிக்காய் சாகுபடியை பொறுத்தவரையில், நீர்ப்பாசனத்திற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. லேசான ஈரப்பதம் இருந்தால் போதும். நல்ல மகசூல் எடுக்கலாம்.பச்சை நிற நெல்லிக்காய் போலவே, இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காயிலும் அதிக சத்துகள் நிறைந்துள்ளன. இதன் வாயிலாக, கூடுதல் வருவாய் ஈட்ட வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:கே.சசிகலா 72005 14168.