காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்ட விஜயேந்திரா அழைப்பு
பெங்களூரு:''தீய மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மாநில காங்கிரஸ் அரசு, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தியதாகக் கூறி, பா.ஜ., மாநில தலைவர் விஜேயந்திரா தலைமையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில், நேற்று போராட்டம் நடந்தது.அப்போது அவர் பேசியதாவது:தீய மற்றும் தலித் விரோத காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எங்களின் போராட்டத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இன்று இதே இடத்தில் பெரிய போராட்டம் நடக்க உள்ளது.பா.ஜ., ஆட்சிக் காலத்தில், எஸ்.சி., - எஸ்.டி.,யினரின் பணத்தை முறைகேடு செய்யவில்லை. எங்கள் கட்சி அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளது. ஆனால் அமைச்சரோ, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் வஞ்சிக்கப்படுவதாக பொய் கூறுகிறார்.நிதியை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக, 14 குழுக்கள் அமைத்து, மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி, மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களில் பா.ஜ.,வின் கை ஓங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகையில், ''மாநில அரசின் கஜானா காலியாக உள்ளது. இதனால் எஸ்.சி., - எஸ்.டி.,யினரின் நல நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். பிச்சை எடுக்கும் நிலைக்கு, மாநிலத்தை சித்தராமையா கொண்டு வந்துவிட்டார். கடன் பிரச்னையிலும் ஒருவர் 'சாம்பியனாக' திகழ்கிறார்,'' என்றார்.